*4 பேரிடம் விசாரணை
*குடிமை பொருள் கடத்தல் போலீஸ் அதிரடி
கோபி : கோபி அருகே உள்ள நம்பியூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 28.5 டன் யூரியா, 3 டன் கோதுமையை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நம்பியூர் காமராஜ் நகர் காலனியில் இருந்து நாச்சிபாளையம் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கிருந்து கடந்த 2 மாதங்களாக யூரியா மூட்டைகள் கடத்தப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ராஜ்குமார், சப்.இன்ஸ்பெக்டர் மேனகா மற்றும் போலீசார் நேற்று மதியம் குடோனில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது, உள்ளே பீகார் மாநிலத்தை சேர்ந்த நான்கு தொழிலாளர்கள், ஒன்றிய அரசு வழங்கும் மஞ்சள் நிற யூரியா மூட்டைகளில் இருந்த யூரியாவை வெள்ளை நிற சாக்கு பைகளில் மாற்றிக் கொண்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தொழிலாளர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த இரு மாதங்களாக இதே போன்று யூரியா மூட்டைகளை மாற்றி விற்பனைக்காக கேரளாவிற்கு அனுப்பி வருவது தெரியவந்தது.
அதன்பின், குடோனில் நடத்திய சோதனையில் 567 மூட்டைகளில் 28.5 டன் யூரியா, 60 மூட்டைகளில் இருந்த 3 டன் கோதுமை இருப்பது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த நம்பியூர் தாசில்தார் வெங்கடேஷ், வருவாய் ஆய்வாளர் கருப்புசாமி, உதவி வேளாண் அலுவலர் உமாமகேஷ்வரி ஆகியோர் குடோனுக்கு சென்று அங்கு இருந்த யூரியா மூட்டைகளை பார்வையிட்டு, பரிசோதனைக்காக மாதிரிகளை எடுத்துச்சென்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட யூரியா மூட்டைகள் அனைத்தும் ஒன்றிய அரசு விற்பனைக்காக மானிய விலையில் வழங்கும் யூரியா என்பது விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்ட தொழிலாளர்கள் பீகார் மாநிலம் டானாபூர் பட்நாத்தை சேர்ந்த சாம் (35), அதே பகுதியை சேர்ந்த ராதா மாத்தூர் (30), ஆதித்யாகுமார் (23), இந்தால் மாத்தூர் (36) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் கடந்த இரு மாதங்களாக மானிய விலையில் கிடைக்கின்ற யூரியாவை சாக்குகளில் மாற்றி வருவதாகவும் உரிமையாளர் யார்? என்பது குறித்து தெரியாது என்று கூறினர்.
அதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 28.5 டன் யூரியா மற்றும் கோதுமையின் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும். இவற்றை குடோனில் வைத்து சீல் வைத்தனர். மானிய விலை யூரியா மற்றும் கோதுமை மூட்டைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நம்பியூரில் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள யூரியா மற்றும் கோதுமை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
