கோடை சீசன் நெருங்கிய நிலையில் 35 ஆயிரம் மலர் நாற்றுகளை பராமரிக்கும் பணி தீவிரம்

*மிலார் செடிகளால் பூந்தொட்டிகள் மூடல்

ஊட்டி : கோடை சீசன் நெருங்கிய நிலையில், 35 ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுக்களை பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகின்றனர். அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக சுற்றுலா பயணிகள் நீலகிரி வருகின்றனர். இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. 5 நாட்கள் வரை நடக்கும் இந்த மலர் கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்நிலையில், வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவுள்ள கோடை சீசனுக்காக தற்போது தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் மும்முராக நடந்து வருகிறது.

மலர் கண்காட்சிக்காக தற்போது தாவரவியல் பூங்காவை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த மாதம் முதல் பூங்காவில் உள்ள பாத்திகள் மற்றும் தொட்டிகளில் மலர் நாற்றுக்கள் நடவு பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. நாற்றுகள் அவைகள் வளரும் காலத்தை பொறுத்து நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், 35 ஆயிரம் தொட்டிகளிலும் கடந்த மாதம் முதல் நாற்று நடவு பணிகள் துவங்கி நடந்து வருகிறது. தற்போது நாள்தோறும் பூங்கா ஊழியர்கள் தொட்டிகளில் நாற்றுகளை பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கோடை வெயில்,பனிப்பொழிவில் மலர் நாற்றுகள் பாதிக்காமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மலர் நாற்றுகள் வாடாமல் இருக்க நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாதம் இறுதி வாரம் முதல் பனியின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பனியின் தாக்கம் குறைந்தால், தொட்டிகளில் வைக்கப்பட்டள்ள கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றப்படும். ேமலும், தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள நாற்றுக்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பெரும்பாலான செடிகளில் மலர்களை காண முடியும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

Related Stories: