திருமலையின் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது

*பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை

திருமலை : திருமலையின் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது என்று பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.திருப்பதி எஸ்பி எல்.சுப்பாராயுடு மற்றும் தேவஸ்தான தலைமை விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா ஆகியோர், திருமலையில் பாதுகாப்பு நலன் கருதி, திருப்பதி தேவஸ்தானத்தால், திருமலையில் ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில், சோதனை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

அதன்பேரில், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், ஆந்திர வனத்துறை, தேவஸ்தான வனத்துறை, தீயணைப்பு துறை, வருவாய் துறையினர், கலால் துறை மற்றும் சுகாதார துறையை சேர்ந்த சுமார் 90 பணியாளர்களுடன், 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் நேற்று திருமலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளான பாலாஜி நகர் பகுதியில் உள்ள வீடுகளில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் வீடுகளில் வசிக்கிறார்களா? அல்லது புதிய நபர்கள், சந்தேகத்திற்கிடமான முறையில் வசிக்கிறார்களா? என்பதை ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் திருமலையில் உள்ள பாலாஜி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள இடங்களில் மொத்தம் 820 வீடுகளில் அதிகாரிகள், அங்கு வசிப்பவர்களின் அடையாள அட்டைகளை ஆய்வு செய்தனர். மேலும், ஆவணங்களின்றி வசித்த 16 பேரை காவல் நிலையங்களுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ஆவணங்கள் இல்லாத 11 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள், திருமலையில் உள்ள தேவஸ்தான குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம், தெரியாத நபர்களுக்கு தங்கள் வீடுகளை வாடகைக்கு விட வேண்டாம்.

சரியான அடையாள அட்டை இல்லாமல் யாரையும் வேலைக்கு அமர்த்த வேண்டாம். திருமலையின் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது என்று குடியிருப்பு வாசிகளிடம் கூறினர்.

Related Stories: