×

5,000 கோடி ரூபாய் உதவுமா? மம்தாவின் அதிரடி வியூகம்

 

எப்படியாவது மேற்குவங்கத்தில் இருந்து மம்தாவை ஒழித்துகட்டிவிட வேண்டும் என்ற வெறியோடு தீவிரமாக களம் இறங்கியிருக்கிறது பா.ஜ. ஆனால் மீண்டும் 4வது முறையாக நான் தான் முதல்வர் என்று அடித்துச்சொல்கிறார் மம்தா. அதற்கேற்ற வியூகங்கள் வகுத்து வருகிறார். தமிழ்நாடு, கேரளாவை போல் அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களின் சம்பள பிரச்னைகள், அகவிலைப்படி உயர்வு, உயர்படிப்புக்கான கூடுதல் ஊதியம் என அத்தனை சலுகைகளையும் ஜனவரி முன்தேதியிட்டு அமல்படுத்தி, பிப்ரவரி சம்பளத்துடன் இணைத்து மார்ச் 1ம் தேதி கையில் கிடைக்கும்படி அதிரடி உத்தரவிட்டுள்ளார். அடுத்ததாக வேலை இல்லாத இளைஞர்களை குறிவைத்து களம் இறங்கியிருக்கிறார் மம்தா. அவர்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் யுவசதி திட்டத்தை தொடங்கி வைத்து இருக்கிறார். இதற்காக ரூ.5 ஆயிரம் கோடியை அதிரடியாக ஒதுக்கி, உடனே திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதற்காக சேர்க்கை முகாம்கள் பள்ளிக்கூடங்கள், சமூக கூடங்களில் நடக்கிறது.

அங்கு எல்லாம் இளைஞர்கள், இளம் பெண்கள் கூட்டம் சான்றிதழ்களுடன் வரிசையில் நிற்கிறது. இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், 21 முதல் 40 வயதுக்குட்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை அல்லது அவர்கள் வேலை பெறும் வரை மாதத்திற்கு ரூ.1,500 வழங்கப்படும் என்று உறுதியளித்து உள்ளது. ஆகஸ்டில் தொடங்கும் என்று முதலில் அறிவித்து இருந்தார் மம்தா. ஆனால் தேர்தல் நெருங்கி வருவதால் ஏப்.1 முதல் அனைவர் வங்கி கணக்கிலும் மாதம் ரூ.1500 விழும் என்று அறிவித்து அதற்காக ரூ.5000 கோடியை ஒதுக்கியிருப்பதால் இளைஞர்களின் பேராதரவு தனக்குத்தான் கிடைக்கும் என்று நம்புகிறார். எப்படியும் மே மாதம் மம்தாவின் வியூகத்திற்கு வெற்றி கிடைத்துவிடுமா என்பது தெரிந்து விடும்.

 

Tags : Mamata ,BJP ,West Bengal ,Chief Minister ,Tamil Nadu ,Kerala ,
× RELATED அரியானா அரசின் ரூ.590 கோடியை ஸ்வாகா...