கவுகாத்தி: அசாமில் வரும் மார்ச்-ஏப்ரலில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2023ல் நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை தேர்தல் இது என்பதால் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கவுகாத்தியில் நேற்று அளித்த பேட்டி: அசாமில் தேசிய ஜனநாயக கூ்ட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.
எந்த கட்சி எந்த தொகுதியில் போட்டியிடும் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். இது தொடர்பாக எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. விரைவில் டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பாஜவின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து வெளியிடுவோம். இவ்வாறு முதல்வர் சர்மா கூறினார்.
