கொல்கத்தா: மேற்குவங்கத்தில் அவசர மற்றும் இடைக்கால நிவாரண வழக்குகளை கையாள குழு அமைத்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மேற்குவங்கத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அவசர மற்றும் இடைக்கால வழக்குகளை கையாள்வதற்காக குழு ஒன்றை அமைத்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கொல்கத்தா உயர் நீதிமன்ற நிர்வாகம் நேற்று வௌியிட்ட அறிவிப்பில், “எஸ்ஐஆர் பணிகள் காரணமாக மாநிலம் முழுவதும் அனைத்து நீதிபதிகளுக்கும் அடுத்த மாதம் மார்ச் 9ம் தேதி வரை விடுமுறை ரத்து செய்யப்படுகிறது. மேலும், நீதிபதிகள் எஸ்ஐஆர் பணியில் ஈடுபட உள்ளதால், அவசர மற்றும் இடைக்கால நிவாரண வழக்குகளை கையாள்வதற்காக நீதிபதிகள் தபப்ரதா சக்ரவர்த்தி, அரிஜித் பானர்ஜி, பதிவாளர் ஜெனரல் நபனிதா ரே, பதிவாளர் (நீதித்துறை சேவை) ராஜூ முகர்ஜி மற்றும் அஜய் குமார் தாஸ் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து கொல்கத்தா நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜோய் பால் உத்தரவு பிறப்பித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
