மீரட்: டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரை இணைக்க 82.15 கிலோமீட்டர் தொலைவிற்கு அதிவேக ரயில் போக்குவரத்து திட்டப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக நடந்து வந்தன. நாட்டின் முதல் மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பின் கீழ் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் சில பகுதிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்த நிலையில், மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், நேற்று மீரட்டில் உள்ள சதாப்தி நகர் நிலையத்தில் நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ ரயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் அங்கிருந்து மீரட் தெற்கு நிலையம் வரை ரயிலில் பயணம் செய்தார். நாட்டின் அதிவேக மெட்ரோ: நமோ பாரத் ரயில்கள் மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லக்கூடியவை. மீரட் மெட்ரோ மணிக்கு 120 கிமீ வேகத்தில் இயங்கும், இது இந்தியாவின் அதிவேக மெட்ரோ அமைப்பாகும். டெல்லியின் சராய் காலே கான் முதல் மீரட் மோடிபுரம் வரையிலான 82 கிமீ தூரத்தை இனி வெறும் 55-60 நிமிடங்களில் கடக்க முடியும்.சாலை மார்க்கமாக சென்றால் இதற்கு 3 மணிநேரம் ஆகும்.
