மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் மார்ச் 2ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. மதுரையில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே, கூடலழகர் பெருமாள் கோயில் உள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்த கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு தெப்பத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி முன்னதாக மேளதாளங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட கொடி பல்லக்கில் கொண்டு வரப்பட்டு, மங்கள வாத்தியங்கள், வேதமந்திரங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து கூடலழகர் பெருமாள், தேவி, பூதேவியுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். விழாவில் வரும் 2ம் தேதி கூடலழகர் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பாடாகி டவுன் ஹால் ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் எழுந்தருளுகின்றனர். அங்கு பல்லக்கில் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தெப்ப உற்சவத்திற்காக தெப்பத்தை சுற்றிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, கூடலழகர் பெருமாள் தங்க சிவிக்கையில் உபய நாச்சியாருடன் தெப்பத்திற்கு வந்தடைவார். அங்கு இரவு 7.45 மணிக்கு தெப்பம் சுற்றுதல் நடைபெறுகிறது. அப்போது அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பெருமாள், அம்பாளுடன் தெப்பக்குளத்திற்குள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதற்கான ஏற்பாடுகளை துணை கமிஷனர் யக்கு நாராயணன், உதவி கமிஷனர் பிரதீபா மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
