சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ஆப் தமிழ்நாடு ஐந்தாண்டு கால விளையாட்டுச் சாதனை விழாவில் கலந்துகொண்டு பேசியதாவது: கடந்த நான்கரை ஆண்டுகளில் நேஷனல் மற்றும் இன்டர்நேஷனல் அளவில் பதக்கங்கள் வென்ற 5 ஆயிரத்து 406 விளையாட்டு வீரர்களுக்கு 177 கோடியே 80 லட்சம் ரூபாய் ‘உயரிய ஊக்கத்தொகை’ வழங்கப்பட்டிருக்கிறது. பன்னாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல்வேறு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கக்கூடிய ஆயிரத்து 172 வீரர், வீராங்கனைகளுக்கு 33 கோடியே 51 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
இதுவரை மொத்தம் 6 ஆயிரத்து 578 வீரர்களுக்கு 211 கோடியே 39 லட்சம் ரூபாய்க்கு ஊக்கத் தொகை வழங்கியிருக்கிறோம். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு ஊக்கத்தொகையை வழங்கியிருக்க மாட்டார்கள். குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி இன்றைக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறோம். ரூ.261 கோடி மதிப்பிலான இந்த பன்முக விளையாட்டு உட்கட்டமைப்புத் திட்டம், சென்னை செம்மஞ்சேரியில் வர இருக்கிறது. படிக்கும் காலத்தில் எந்த விதமான கவனச் சிதறல்களுக்கும் இடம் கொடுக்காதீர்கள், எல்லோரும் ஏதாவது ஒரு விளையாட்டில் எடுத்து விளையாடுங்கள். அடுத்து, அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0ல் இன்னும் இன்னும் திட்டங்கள் வரிசை கட்டி வர இருக்கிறது. நாங்களும் வென்று வருவோம். நீங்களும் தொடர்ந்து வென்று வாருங்கள்.
