வெளியூருல ஒரு தொகுதியும் தேறல… வேளச்சேரிக்கு துண்டு போடும் விஜய்: சீக்ரெட்டாக நடந்து முடிந்த சர்வே

தவெக தலைவரும், நடிகருமான விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக, அவருடைய தேர்தல் வியூக வகுப்பாளர் குழு, தொகுதிகளில் கள நிலவரம் குறித்து அறிய தனியாக ‘டீம்’ ஒன்று அமைத்தது. சென்ைன வேளச்சேரி, திருச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரகசியமாக சர்வே எடுக்கப்பட்டது. இதில் கட்சி ஆரம்பித்த உடன் முதல் பிரசாரத்தை விஜய் திருச்சியில் தொடங்கினார்.

நடிகர் என்பதால் அவரை பார்க்க கூட்டம் வந்தது. தொடர்ந்து, அவர் செல்லும் இடங்களில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை. திருச்சி கிழக்கு தொகுதியை குறி வைத்து சர்வே எடுக்கப்பட்டது. இதைப்போல், நாகப்பட்டினத்திலும் எடுக்கப்பட்டது. ஆனால், சென்னையை தவிர்த்து வெளியூர் வேண்டாம் என விஜய் கூறி விட்டதாக தெரிகிறது. வீட்டை விட்டு வெளியே வராத விஜய், பிரசாரத்திற்காக அடிக்கடி போட்டியிடும் தொகுதிக்கு வர வேண்டியிருக்கும். இதனை கருத்தில் கொண்டு விஜய் சென்னையில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

இதையடுத்து, சென்னை மாநகரில் சர்வே எடுக்கப்பட்டது. இதில், வேளச்சேரி தொகுதியில் போட்டியிட விஜய் முடிவு செய்துள்ளார். இதற்கான வேலைகளை அவருடைய ஆதரவாளர்கள் திரைமறைவில் செய்து வருகின்றனர். இது குறித்து தவெக நிர்வாகிகள் கூறுகையில்,‘‘விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது சென்னையை தவிர்த்து வேறு தொகுதியில் போட்டியிட வேண்டும் என நினைத்தார். ஆனால், கள நிலவரம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

இதனால் போட்டியிடுவதில் இருந்து அவர் பின்வாங்கினார். மேலும், ஆதரவாளர்களுக்கு சீட் கொடுத்து களத்தில் இறக்கி விட முடிவு செய்துள்ளார். சென்னை வேளச்சேரியில் களம் இறங்கலாம் என அவருடைய தேர்தல் வியூக வகுப்பாளர் சொல்லியுள்ளார். தேர்தல் வியூக வகுப்பாளர் சொல்லுவதை அவர் முழுமையாக ஏற்றுக்கொள்வது கிடையாது.

தேர்தலில் தோல்வி அடைந்தால், தனக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என விஜய் அச்சத்தில் உள்ளார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அவர் குழம்பி உள்ளார். வேறு வழியின்றி வேளச்சேரியில் போட்டியிடலாம், இல்லாவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவது சந்தேகம் தான்’’ என்றனர்.

* இதுவரை 52 பேர் உயிரிழப்பு நூற்றுக்கணக்கானோர் மயக்கம்: இனிமேல் விஜய் கூட்டத்துக்கு மினி மருத்துவமனை வருதாம்.. நடிகர் விஐய் நடத்திய விக்கிரவாண்டி மாநாட்டில் 7 பேர், மதுரை மாநாட்டில் 3 பேர், கரூர் பிரசாரத்தில் 41 பேர், சேலம் நிர்வாகிகள் சந்திப்பில் ஒருவர் என 52 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் வரும் 23ம் தேதி விஐய் பங்கேற்கும் பிரசார கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்கான அனுமதி கேட்டு தவெகவினர், வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று முன்தினம் மனு அளித்தனர். அப்போது, கூட்டம் நடைபெறும் இடத்தில் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், 50 டாக்டர்கள், 100 நர்சுகள், 10 ஆம்புலன்ஸ்கள் கொண்ட மினி மருத்துவமனைபோல் கூட்டம் நடைபெறும் இடத்தில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என கூறினர்.

Related Stories: