நாம் தமிழர் கட்சி சார்பில் ‘‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’’ என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி புதூரில் வரும் 21ம்தேதி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டு திடலை கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் யாரும் கட்டாயப்படுத்தி மதம் மாறவில்லை. அவரவர் விரும்பி தான் மதம் மாறுகின்றன. யாரையும் கட்டாயப்படுத்தி மாற்ற முடியாது.
மதம், மொழி, வழிபாடு, கல்வி, தேர்வு உள்ளிட்டவை அவரவர் விருப்பத்திற்கு உட்பட்டது. இதில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அதற்காகத்தான் போராடி சுதந்திரம் பெறப்பட்டுள்ளது. அதில் யாரும் தலையிடக்கூடாது. திருப்பரங்குன்றத்தில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக பிரச்சனை செய்தார்கள். நூறாண்டுகளாக அங்கு ஏற்றப்படவில்லை. தற்பொழுது அங்கு விளக்கு ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்.
இதற்கு காரணம் தேர்தல் தான். 2026 சட்டமன்ற தேர்தலில் நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. உங்களுடன் தான் (மக்களுடன்) கூட்டணி வைக்கிறோம். இந்தியா கூட்டணியில் வலுவாக இருப்பது முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். அவர் வெளியேறி விட்டால் இந்தியா கூட்டணி என்பது எழுத்தில் தான் இருக்கும். அதனால் தான் மணிசங்கர் அய்யர், மு.க.ஸ்டாலினை தலைமை தாங்க அழைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
* எங்கு போட்டி?
‘மாநாட்டு தேதியில் இருந்து எங்கள் தேர்தல் அரசியல் துவங்கும். இந்த மாநாட்டில் நாதக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். நான் எந்த தொகுதியில் போட்டியிட போகிறேன் என்பது 2 நாளில் தெரியும்’ என்று சீமான் தெரிவித்தார்.
