சொன்னாரு..! செஞ்சாரு..!! மகப்பேறு விடுப்பு காலம் நீட்டிப்பு

சொன்னாரு: திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு காலத்தை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

செஞ்சாரு: புதிய ஆட்சி பொறுப்பேற்று 2 மாதங்களில் அதாவது முதல் சட்டப்பேரவை பட்ஜெட்டிலேயே இந்த அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார். பின்னர், மனிதவள மேலாண்மை துறை மூலமாக 2021ம் ஆண்டு ஆக.13ம் தேதி அரசாணையாக வெளியிடப்பட்டன. அதன்படி, 12 மாத கால முழு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தக்கூடிய ஒன்றாகும்.

மேலும், தனியார் துறையில் ஒன்றிய அரசின் மகப்பேறு நலச்சட்டத்தின் படி 6 மாதங்கள் மட்டுமே விடுப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டு அதனை செயல்படுத்தியும் காட்டியுள்ளது தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு. அண்மையில் தமிழக அரசு தரப்பில் வெளியான புதிய உத்தரவின்படி, புதிதாக பணி சேர்ந்து இளம் பெண் ஊழியர்கள் முதல் 6 மாதத்தில் மகப்பேறு விடுப்பு எடுத்தாலும் அவர்களது பணிக்காலமாகவே கணக்கில் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

இதில் பெண் காவல்துறையினருக்கு கூடுதல் சலுகையையும் முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி, இந்த 12 மாத விடுப்பு நீட்டிக்கப்பட்டதுடன். பெண் காவலர்கள் பணிக்கு திரும்பிய பின் 3 ஆண்டுகளுக்கு அவர்கள் விரும்பும் இடத்திற்கு பணி மாறுதலும் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த பேருகால நீட்டிப்பு உத்தரவால் முதல் ஆறு மாதங்கள் முழுமையான தாய்ப்பால் குழந்தைகளுக்கு கிடைப்பதை இது உறுதி செய்கிறது.

அதேபோல், பிரசவத்திற்கு பிந்தைய உடல் நல பாதிப்புகளில் இருந்து மீள இது உதவுகிறது. மேலும், ஊழியர்கள் மன அழுத்தமில்லாமல் பணிக்கு திரும்பும் போது அவர்களின் வேலைத்திறன் சிறப்பாக இருக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். இத்திட்டம் லட்சக்கணக்கான தாய்மார்களின் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும், நிதி ரீதியாக பார்த்தால் அரசுக்கு ஒரு செலவீனமாக இந்த நீட்டிப்பு தெரிந்தாலும், சமூக ரீதியாக இது ஒரு முதலீடாகவே பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: