மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர் பிரதிநிதிகள் குழுவினர் முதல்வருக்கு நன்றி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் குழு முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்து, கடந்த 5 ஆண்டுகளாக முகாம் வாழ் தமிழர்களுக்காக செயல்படுத்திவரும் பல்வேறு சிறப்பான நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை, நீண்ட கால விசா வழங்குதல் உள்ளிட்ட நிலையான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான நிரந்தர தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

5 ஆண்டுகளில் 5,920 புதிய கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுத்து, வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியவருவதோடு மட்டுமல்லாமல், தற்சார்பு மற்றும் எதிர்கால நம்பிக்கைக்கு தொழிற்கூடங்கள் அமைத்து தந்ததற்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர். முகாம் வாழ் தமிழர்களின் நன்றியை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் நலன், கண்ணியம் மற்றும் சட்ட உரிமைகளை உறுதி செய்வதில் இவ்வரசு எப்போதும் உறுதியாக இருக்கும் என்று அவர்களிடம் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் நாசர், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொதுத் துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் வள்ளலார், பொதுத்துறை அரசு கூடுதல் செயலாளர் பாலசுப்ரமணியம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: