கடலூர்: ஆங்கிலேயர்களின் தென்னிந்திய வர்த்தக தலைநகர் என்ற அடிப்படையில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகராக கடலூர் விளங்கி வருகிறது. சென்னை மாகாணத்தின் முதல் பிரதம அமைச்சர் சுப்புராயலு ரெட்டியார், சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள், தியாகி ராமசாமி படையாட்சி, எழுத்தாளர் ஜெயகாந்தன் உள்ளிட்ட பிரபலங்கள் பிறந்த ஊர்கள் உள்ளடக்கிய தொகுதி. சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் நடைபெற்ற 1952ம் ஆண்டு முதல் கடலூர் சட்டமன்ற தொகுதி இருந்து வருகிறது. இத்தொகுதி கடலூர் மாநகராட்சியும், புதுச்சேரி மாநிலம் ஒட்டியுள்ள கடலூர் ஒன்றிய பகுதிகளையும் கொண்டுள்ளது. எஸ்ஐஆர் திருத்தத்திற்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் படி, 1,01,807 ஆண்கள், 1,11,509 பெண்கள், 76 மாற்றுப்பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 392 வாக்காளர்கள் கடலூர் தொகுதியில் இடம்பெற்றுள்ளனர்.
1952ம் ஆண்டு தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் ரத்தினம், 1957, 1962 ஆகிய தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் பி.ஆர்.சீனுவாச படையாட்சி, 1967ம் ஆண்டு திமுகவின் இளம்வழுதி, 1971ல் திமுகவின் கோவிந்தராஜ், 1977ல் அதிமுகவின் அப்துல் லதீப், 1980ல் திமுகவின் பாபு கோவிந்தராஜன், 1984ல் காங்சிரசின் வி.ஜி.செல்லப்பா, 1989ல் திமுகவின் இள.புகழேந்தி, 1991ல் காங்கிரசின் பிஆர்எஸ் வெங்கடேசன், 1996, 2001ல் திமுகவின் இள.புகழேந்தி, 2006ல் திமுகவின் ஐயப்பன், 2011, 2016ல் அதிமுகவின் எம்.சி.சம்பத், 2021ல் திமுகவின் ஐயப்பன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். கடலூர் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை கடந்த 4 சட்டமன்ற பொதுத்தேர்தல்களிலும் திமுக-அதிமுக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. 2006ம் ஆண்டு திமுக சார்பில் ஐயப்பன் போட்டியிட்டு 67,003 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுகவின் குமார் 60,737 வாக்குகளுடன் இரண்டாவது இடம் பெற்றார். வெற்றி வித்தியாசம் 6266 வாக்குகள். 2011ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.சி.சம்பத் 85,953 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக திமுகவின் இள.புகழேந்தி 52,275 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பெற்றார். வெற்றி வித்தியாசம் 33,678 வாக்குகள். 2016ம் ஆண்டு அதிமுகவின் எம்.சி.சம்பத் 70,922 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவின் இள.புகழேந்தி 46,509 வாக்குகளுடன் இரண்டாமிடம் பெற்றார். வெற்றி வித்தியாசம் 24,413 வாக்குகள். 2021ம் ஆண்டு திமுகவின் ஐயப்பன் 84,563 வாக்குகள் பெற்றார். அதிமுகவின் எம்.சி. சம்பத் 79,412 வாக்குகளுடன் இரண்டாமிடம் பெற்றார். வெற்றி வித்தியாசம் 5151 வாக்குகள். கடலூர் தொகுதியில் கடந்த 4 சட்டமன்ற பொதுத்தேர்தல்களிலும் திமுக 2 முறை, அதிமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளது.
கடலூர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட அதிமுகவின் எம்.சி.சம்பத் இரண்டு முறையும் அமைச்சர் பதவி வகித்தார். இருப்பினும், 2021ம் ஆண்டு 3வது முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்து உள்ளார். இந்நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலிலும் எம்.சி.சம்பத் சீட் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் கிட்டத்தட்ட அவரே வேட்பாளர் என்று அனைத்து தரப்பிலும் பரவலாக பேசப்படுகிறது. இருப்பினும் அமமுகவினரும் சீட் கேட்டு வருகின்றனர். இதனால், சீட் பெற்றாலும் இலை கட்சி பிளவு கோஷ்டி மற்றும் சொந்த கட்சிக்காரர்களால் உள்ளடி வேலைகள் நடைபெறலாம் என்ற கலக்கத்தில் இருதரப்பினரும் உள்ளனர். திமுக கூட்டணியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடலூரில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றன.
இடைத்தேர்தலை சந்திக்காத கடலூர்
கடலூர் சட்டமன்ற தொகுதி கடந்த 1952ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. இதுவரை 16 பொதுத்தேர்தல்கள் நடைபெற்றுள்ள நிலையில், இதுவரை ஒருமுறைகூட இங்கு இடைத்தேர்தல் நடந்ததில்லை.
