கேசவ விநாயகத்தால் நிறைய பெண்கள் பாதிப்பு: பொய் பேசுவதில் போட்டி வைத்தால் அண்ணாமலைக்கு தான் முதலிடம்; – முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி.சேகர்

1. கேசவ விநாயகத்தை பாஜவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியதை எப்படி பார்க்கிறீர்கள்?
கேசவ விநாயகம் 2016ம் ஆண்டே நீக்கப்பட வேண்டும் என நான் சொல்லிக் கொண்டு இருந்தேன். இன்றைக்குக் கூட ஆர்எஸ்எஸ்சில் முக்கியமானது தனிமனித ஒழுக்கம் எனச் சொல்லியுள்ளார்கள். அது நிறையப் பேருக்கு இருப்பது போன்றே தெரியவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பே 163 பேர் புகார் கொடுத்துள்ளனர். ஆர்எஸ்எஸ்சில் உள்ளவர்கள் ஆண்களுடனே பழகியதால், மாறுபட்ட பாலினத்தைப் பார்க்கும்போது பிரச்னை வந்து விடுகிறது. இன்றைக்காவது கேசவ விநாயகத்தை நீக்கியுள்ளதை பார்க்கும் போது அங்குள்ள நிறையப் பெண்கள் சந்தோஷப்படுவார்கள். பாஜவினர் தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை எனச் சொல்லும் போது, தமிழ்நாட்டு பாஜவில் தான் பாதுகாப்பில்லை என நிறையப் பெண்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது கொஞ்சம் பாதுகாப்பு வருவதற்கு வாய்ப்புள்ளது.

2. அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டதால் தான் கேசவ விநாயகம் நீக்கப்பட்டார் என நினைக்கிறீர்களா?
அண்ணாமலை தனது சொந்த முயற்சியால் ரகசியமாக கேமரா, டேப் ரெக்கார்டர் வைத்து எடுத்து, அடுத்தவர்களின் பலவீனத்தை வைத்து மிரட்டி அரசியல் செய்யும் வித்தியாசமான ரிட்டையர்டு போலீஸ்காரர். அண்ணாமலைக்கு யாரும் கிரிமினல் வேலை சொல்லித் தரத் தேவையில்லை. ஐபிஎஸ் தேர்வு முதல் முறை எழுதி அஸ்ஸாம் அருகில் வேலை கிடைத்ததால், மறுபடியும் எழுதி தான் கர்நாடகா வந்தார். இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளில் யார் அதிகம் பொய் பேசுகிறார்கள் என்ற போட்டி வைத்தால் அண்ணாமலை தான் முதல் இடத்தில் வருவார். அவசரத்தில் பெயரை மாற்றிச் சொல்லும் அளவிற்கு பொய் சொல்லும் திறமை வாய்ந்தவர் அண்ணாமலை. எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஆரம்பத்திலேயே நிலம் ஒதுக்கிக் கொடுத்தாகி விட்டது. ஆனால் கட்டவில்லை. திமுகதான் இடம் கொடுக்கவில்லை என்று பேசுறாங்க. இடம் கொடுக்காமல் எப்படிச் செங்கல் வைத்தார்கள்.

3. தமிழக பாஜகவில் அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டார் என்று நினைக்கிறீர்களா?
ஆமாம். தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் இருக்கும் வரை ஓரம்கட்டும் முயற்சியைக் கொஞ்சம் தள்ளிப் போடுவார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆகியோரும் அண்ணாமலை தமிழ்நாட்டில் இருந்தால் பாஜ ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என்ற தங்களின் உறுதியான நிலைப்பாட்டை அமித்ஷாவிடம் சொல்லி இருக்கிறார்கள். அண்ணாமலை இல்லையென்றால் ஒரு நான்கு சீட்டாவது ஜெயிக்க முடியும். அண்ணாமலையின் ஒரே நோக்கம் இந்தத் தேர்தலில் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஒரு சீட் கூட ஜெயித்துவிடக்கூடாது என்பது தான். எடப்பாடி ஆட்சி அமைத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளார். அண்ணாமலை தமிழ்நாட்டில் இருப்பது திமுகவிற்குப் பெரிய பலம்.

4. சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்த விஜய்க்கு இந்த சட்டமன்ற தேர்தல் எப்படி இருக்கும்?
விஜயகாந்த் எப்படி தனது முதல் தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு 1 தொகுதியில் வெற்றி பெற்றாரோ, நடிகர் கமல்ஹாசன் எப்படி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லையோ, அதற்குப் போட்டியாக விஜய் வருவார். ஏனென்றால் கள நிஜம் தெரியாமல் சினிமா ஸ்கிரிப்ட் போலவே தேர்தலும் இருக்கும் என நினைக்கக்கூடிய விஜய்க்கு 2026 சட்டமன்ற தேர்தல் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடத்தைப் புகட்டும். அதேபோல் ஜனநாயகன் தான் தனது கடைசிப்படம் எனச் சொல்கிறார். அது இல்லை எனக் கூறி ஜுன் மாதத்தில் இருந்து அடுத்த படம் நடிக்கப் போய்விடுவார். ஒரு நல்ல நடிகன் தொடர்ந்து நடிகனாகவே இருப்பார். அவரது ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். விஜய் வந்ததன் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் எனது அருமை நண்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைப்பார்.

Related Stories: