மகளிர் உரிமைத்தொகை முன்பணமாக ரூ.5000 முதல்வருக்கு கட்சித்தலைவர்கள் பாராட்டு

சென்னை: மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக ரூ.5000 என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் நல திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசுக்கும் கடும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:
செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்): மகளிர் குடும்பத் தலைவர்களுக்கான மாதாந்திர உதவி தொகை உயர்வு அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் 1.31 கோடி குடும்பங்கள் நேரடியாகப் பயன் பெற உள்ளன. கடந்த மாதம் தமிழர் திருநாளான பொங்கல் முன்னிட்டு ஒரு குடும்பத்திற்கு ரூ.3,000 வழங்கப்பட்டதும், தற்போது இம்மாதம் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.5,000 வழங்கப்படுவதாலும், அடுத்தடுத்த மாதங்களில் ஒரு குடும்பம் மொத்தமாக ரூ.8,000 பெறும் நிலையில், குடும்பங்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றம் உருவாகியுள்ளது.
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): சொன்னதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சொல்லாததையும் செய்து காட்டுவார் என்பதற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டமே சான்றாக இருக்கிறது. திமுக ஆட்சியில் மகளிர் நலன் காக்கும் ஏராளமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, தாய்க்குலத்தின் பேராதரவு திராவிட மாடல் ஆட்சிக்குப் பெருகிக்கொண்டே போகிறது. இந்நிலையில் சர்க்கரை பந்தலில் தேன்மாரி பொழிந்ததைப் போல் முதல்வர் வெளியிட்டிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பற்றிய அறிவிப்பை மதிமுக வரவேற்று பாராட்டுகிறது.
பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): தமிழகமெங்கும் ரூ.5000 என்பதே பேச்சாக இருக்கிறது. மகளிர் உரிமைத்தொகை பெறக்கூடிய அனைத்து குடும்பங்களிலும் மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சியை காண்கிறேன்.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): தேர்தல் நடத்தை விதிகளால் மகளிர் உதவித் தொகை செலுத்தும் நடவடிக்கை பாதிக்கப்பட்டு, அதனால் குடும்பத் தலைவிகள் சிரமங்களை சந்திக்கக் கூடாது என்ற பொறுப்புணர்வோடும், கோடைக் காலத்தில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை நாட்கள் என்பதாலும், குடும்பச் செலவுகள் கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு சிறப்பு நிதியாக ரூ.2000ம் சேர்த்து, குடும்பங்களுக்கு தலா ரூ.5000 வீதம் வங்கியில் முன்கூட்டியே செலுத்தியது அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் சமூக நீதி பார்வையும், பாலின சமத்துவம் நோக்கிய நடவடிக்கைகளையும் வரவேற்கிறோம்.
எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக தலைவர்): மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை’ பெறும் 1.31 கோடி பெண்களுக்கு முன்பணமாக ரூ.5000 அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை, பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான மற்றும் வரவேற்கத்தக்க முடிவாகும்.
நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ கட்சி தலைவர்): தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட முயன்றவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து, ஏழை எளிய பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அதிரடி முடிவை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை மிகவும் துணிச்சலானது, பாராட்டத்தக்கது.
பொன்குமார் (தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர்): முதல்வர் மு.க.ஸ்டாலின் 1.31 கோடி மகளிருக்கு தலா ரூ.5000 வீதம் ரூ.6550 கோடியை மகளிர் வங்கிக் கணக்கிலும் செலுத்தி திராவிட மாடல் ஆட்சி என்பது மகளிருக்காண ஆட்சி என்பதை நிரூபித்துள்ளார்.

 

Related Stories: