கரூர் பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் சேலம் விஜய் கூட்டத்தில் ரசிகர் பலி: கொளுத்தும் வெயிலில் 3 மணி நேரத்திற்கும் மேல் நிற்க வைத்ததால் கொடூரம்

சேலம்: கரூர் பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் சேலத்தில் நேற்று நடந்த விஜய் கூட்டத்தில் ரசிகர் பலியானார். விஜய் வருகைக்காக 3 மணி நேரத்திற்கு மேல் கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்ததால் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கிய பின்னர், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சனிக்கிழமை தோறும் பிரசார பயணம் மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் செப்டம்பர் 27ம் தேதி கரூரில் நடந்த பிரசார கூட்டல் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ரசிகர்கள் செத்து மடிந்த தகவல் கேள்விபட்டும், எதுவும் வாய் திறக்காமல் சென்னைக்கு தனி விமானத்தில் வந்தார். பிறகு 3 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வாய் மூடி இருந்தார். சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து 72 நாட்களுக்கு பிறகு தான் வீட்டை விட்டே வெளியில் வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரியிலும், அதன்பின் ஈரோட்டிலும் மக்கள் சந்திப்பு கூட்டத்தை விஜய் நடத்தினார்.

இதை தொடர்ந்து சேலம் சீலநாயக்கன்பட்டியில் 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்த போலீஸ் அனுமதி அளித்தது. அதன்படி, தவெக சேலம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், நேற்று சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் கேவிபி கார்டன் மைதானத்தில் நடந்தது. மதியம் 12 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிக்குள், விஜய் பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மாவட்டம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் 5 ஆயிரம் பேருக்கு பாஸ் வழங்கி, கூட்டத்திற்கு நிர்வாகிகள் வரவழைத்தனர். இவர்கள் காலை 6 மணி முதலே கூட்டம் நடந்த மைதானத்திற்கு வந்தனர்.

திறந்தவெளி மைதானத்தில் நிழலுக்கு மேற்கூரை ஏதும் இன்றி, பாக்ஸ்கள் அமைத்து, அதனுள் கட்சியினரை நிறுத்தி வைத்திருந்தனர். உள்ளே நாற்காலி ஏதும் போடப்படவில்லை. இதனால் கூட்டத்திற்கு வந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாக்ஸ்களுக்குள் நின்றிருந்தனர். மதியம் 12.30 மணிக்கு, கூட்டம் நடந்த மைதானத்திற்கு விஜய் வந்தார். உச்சி வெயில் கொளுத்தும் பகல் 12.40 மணிக்கு, அவர் பிரசார பஸ் மீது ஏறி சுமார் அரை மணி நேரம் பேசினார். விஜய் பேசிக்கொண்டிருக்கும் போது, கூட்டத்திற்குள் ஒரு சிலர் மயங்கி விழுந்தனர்.

அதை அவர் கண்டுகொள்ளாமல் பேசிக் கொண்டிருந்தார். மயங்கியவர்களுக்கு பாக்ஸ்களில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்களை நிர்வாகிகள் கொடுத்தனர். இதில், கூட்டத்திற்குள் இருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர், திடீரென மயங்கி விழுந்தார். அவரால் எழுந்திருக்க முடியவில்லை. உடனே கட்சியினர் அவரை ஆம்புலன்சுக்கு தூக்கி கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும், மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு, வழியிலேயே அவர் இறந்து விட்டார் எனத் தெரிவித்தனர். தகவலறிந்து அன்னதானப்பட்டி போலீசார் வந்து விசாரித்தனர். அதில், விஜய் கூட்டத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தது, சேலம் சீலநாயக்கன்பட்டி சிவசக்திநகரில் வசித்து வந்த சூரஜ் (37) எனத் தெரியவந்தது. இவர் அன்னதானப்பட்டி மணியனூரில் வெள்ளிப்பட்டறை நடத்தி வந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சூரஜ், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சேலத்திற்கு வந்து வெள்ளிப்பட்டறையில் வேலை பார்த்துள்ளார். பிறகு சொந்தமாக பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார்.

இவருக்கு பிரியங்கா (35) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். நடிகர் விஜய்யின் ரசிகரான சூரஜ், பக்கத்து வீட்டில் வசிக்கும் தவெக கட்சி நிர்வாகியிடம், பாஸை வாங்கிக் கொண்டு, காலை 9 மணிக்கே வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ஏற்கனவே 2 முறை, இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள சூரஜ், கொளுத்தும் வெயிலில் விஜய்யை பார்ப்பதற்காக காத்திருந்துள்ளார். 3 மணி நேரத்திற்கும் மேலாக, ஒரே இடத்தில் கால் கடுக்க வெயிலில் நின்றிருந்த அவர், திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியில், பலியானது தெரியவந்தது.

இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கரூரில் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில், 41 பேர் பலியான நிலையில், தற்போது சேலம் கூட்டத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். கட்டுப்பாடுகள் பல விதிக்கப்பட்டும், இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டத்திற்கு போதிய ஏற்பாடுகளை செய்யாமல், நிர்வாகிகளை வெயிலில் காத்திருக்க வைத்ததால் ஒருவர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* விஜய் பங்கேற்ற மாநாடு, பிரசாரத்தில் இதுவரை 52 பேர் பலி
தவெக சார்பில் விஜய் பங்கேற்ற மாநாடு, பிரசாரத்தில் இதுவரை 52 பேர் பலியாகி உள்ளாதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர். அதன் விவரம்:
விக்கிரவாண்டி மாநாடு 7 பேர் பலி
மதுரை மாநாடு 3 பேர் பலி
கரூர் பிரசாரம் 41 பேர் பலி
சேலம் நிர்வாகி சந்திப்பு ஒருவர் பலி

* பலியான சூரஜ் மனைவிக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம் கிடைத்தது
பலியான சூரஜ் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 20 ஆண்டுகளாக சேலத்தில் வசித்து வந்தார். இவரது வீட்டின் அருகே வசிக்கும் பெண்கள் கூறுகையில், ‘‘சூரஜ் மிகவும் அமைதியானவர். அவரது மனைவிக்கு சரியாக தமிழ் தெரியாது. ஆனால் சூரஜ் நன்றாக தமிழ் பேசுவார். காலையில் கூட அவரை பார்த்தேன். அப்போது அக்கா, என் மனைவி வங்கி கணக்கிற்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம் கிடைத்து விட்டது எனத்தெரிவித்தார். அதன்பிறகு தான், இங்கிருந்து விஜய் கூட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்,’’ என்றனர்.

* செங்கோட்டையன், புஸ்ஸி ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதம்
கூட்டம் முடிந்ததும் நடிகர் விஜய் வெள்ளை நிற வேனில் கையசைத்தபடி புறப்பட்டு சென்றார். அவருக்கு பின்னால் ரசிகர்கள் வாகனங்கள் எதுவும் செல்லாத வகையில், போலீசார் பேரிகார்டுகளை போட்டு நிறுத்தியிருந்தனர். அந்த பாதையில் தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் தனித்தனி வாகனங்களில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பேரிகார்டு போட்டு அடைத்திருந்த பகுதியை திறக்கக் கோரி போலீசாரிடம் கூறினர். மேலும், செங்கோட்டையனுடன் வந்த ஆதரவாளர்கள், பேரிகார்டை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால் வாக்குவாதம் செய்த அவர்கள் கேட்டை திறக்காவிட்டால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் போலீசாருக்கும், செங்கோட்டையன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. செங்கோட்டையன் காரில் இருந்தபடி அவரது ஆதரவாளர்களை அமைதிப்படுத்தினார்.

* பேரிகார்டை தள்ளி விட்டு பாய்ந்த ரசிகர்கள்
தவெக தலைவர் விஜய், பிற்பகல் 12.25 மணியளவில் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தார். சீலநாயக்கன்பட்டி மேம்பாலத்தில் இருந்து இறங்கி, சுமார் 200 மீட்டர் தூரத்தில் ரோட்டை கடந்து பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். அவர் கடக்கும் பாதையில் சாலையின் ஓரமாக ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தனர். அவர்களை போலீசார் தடுத்து பேரிகார்டுகளை போட்டு, ரோட்டிற்கு சென்று விடாத வகையில் பாதுகாப்பாக நின்றிருந்தனர். மேலும், கயிறு கட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விஜய் அந்த இடத்திற்கு வந்தபோது, போலீசாரின் பேரிகார்டுகளை தள்ளி விட்டு ரசிகர்கள் அவரது காரை சூழ்ந்து கொண்டனர்.

இதனால் போலீசார் கடும் சிரமத்திற்குள்ளாகினர். பின்னர், போலீசார் கூட்டத்தை அப்புறப்படுத்தி விஜய்யை பத்திரமாக கூட்டம் நடந்த இடத்திற்கு அனுப்பி வைத்தனர். அதேபோல், கொண்டலாம்பட்டி ரவுண்டானாவை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கு பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நடிகர் விஜய் பொதுகூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தபோது நாலாபக்கமும் இருந்து அவரை பார்ப்பதற்கு முண்டியடித்துக் கொண்டு ரசிகர்கள் வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசாரை தள்ளி விட்டு ஓடினர். இதில் 4 பெண் போலீசார் உள்பட ரசிகர்கள் சிலர் கீழே விழுந்தனர்.

* மாரடைப்பால் சூரஜ் இறந்தார் -தவெக
தவெக மாநில இணைப்பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தனது எக்ஸ் தளத்தில், ‘‘இன்று தவெக சார்பில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு வந்த சூரஜ் என்ற இளைஞர், திடீர் உடல்நலக்குறைவால் மயங்கி உள்ளார். அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு, கழக நிர்வாகிகள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், மாரடைப்பால் சூரஜ் மரணமடைந்தது வேதனை அளிக்கிறது. இளைஞர் சூரஜின் இந்த எதிர்பாராத மரணத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,’’ எனக் கூறியுள்ளார்.

* சூரஜ் உடலில் எந்த பிரச்னையும் இல்லை -நண்பர் மணிகண்டன் பேட்டி
விஜய் பிரசார கூட்டத்தில் மயங்கி விழுந்து சூரஜ் பலியானார். அவரது உடல், சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அவரது மனைவி பிரியங்கா மற்றும் நண்பர்கள் வந்தனர்.அப்போது, மனைவியிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்கவிடாமல் தவெகவினர் தடுத்து, உள்ளே அனுப்பி வைத்தனர். சூரஜ் நண்பரான மணிகண்டன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எனது நண்பர் சூரஜ் உடலில் எந்த பிரச்னையும் இல்லை. அவர், உடல்நலக்குறைவால் இறந்தார் எனக்கூறுவது தவறு. அவர் நல்ல நிலையில் தான் இருந்தார். காலையில் கூட நன்றாக இருந்தநிலையில் தான், கூட்டத்திற்கு சென்றார். அங்கு மயங்கி விழுந்து தற்போது இறந்துவிட்டார்,’’ என்றார்.

* மலை மீது ஏறியவர்களால் பரபரப்பு
விஜய் கூட்டத்திற்கு அனுமதி கிடைக்காதவர்கள், அருகில் உள்ள மலை மீது ஏறுவார்கள் என்பதால் மலைக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதாக ஏற்கனவே நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், நேற்று கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, மலையின் மீது சிலர் இருந்தனர். குறிப்பாக, வயதான பெரியவர்கள் இருவரும், பெண்கள் சிலரும் ஆபத்தான முறையில் மலையின் மீது அமர்ந்து கொண்டிருந்தனர்.

* அனுமதி பாஸ் ரூ.5,000க்கு விற்பனை?
சேலத்தில் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொள்ள 4,998 பேருக்கு மட்டும் அனுமதி என போலீசார் தெரிவித்தனர். இதன்படி, அனுமதி அட்டைகள் அச்சிடப்பட்டு நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன. இதனிடையே, நேற்று முன்தினம் இரவு, கூடுதலாக 1,000 அட்டைகளை வெளியாட்கள் அச்சடித்து விநியோகித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒரு அட்டை ரூ.5,000 என்ற அடிப்படையில், பிளாக்கில் சீலநாயக்கன்பட்டி முழுவதும் ஒரு கும்பல் விற்பனை செய்துள்ளது. இதனையடுத்து கட்சியினரால் அச்சிடப்பட்ட அட்டையின் பின்புறத்தில், நிர்வாகிகள் கையெழுத்திட்டு விநியோகம் செய்ய தொடங்கினர். அதே சமயம், பெண்களுக்கு இந்த அட்டைகள் முழுமையாக செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில், குறைந்த எண்ணிக்கையிலேயே கூட்டம் இருந்தது. இதனையடுத்து உடனடி ஏற்பாடாக, அப்பகுதியில் உள்ள பெண்கள் வரவழைக்கப்பட்டு, எந்தவித அட்டையும் இன்றி உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

* விஜய் கூட்டத்திற்கு சவப்பெட்டியுடன் செல்லுங்கள்
அதிமுக செய்தித்தொடர்பாளர் ராஜ்சத்யன், 6 பேர் சவப்பெட்டியை தூக்கிக்கொண்டு நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இனிமேல் தவெக கூட்டத்திற்கு போனால் கையோடு சவப்பெட்டியும் கொண்டு போக வேண்டும் என்பது உறுதி’ என்று பதிவிட்டுள்ளார்.

* நிருபரை தாக்கிய தவெக நிர்வாகியின் காரை முற்றுகையிட்டு போராட்டம்
விஜய் கூட்டத்தில் பங்கேற்ற ரசிகர் சூரஜ் இறந்த செய்தி அறிந்து மருத்துவமனை முன் செய்தியாளர்கள் திரண்டனர். அங்கு வந்த சூரஜின் மனைவி பிரியங்காவிடம் பேட்டி எடுப்பதற்கு சென்றனர். அப்போது தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் சிலர், சூரஜின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற வந்தனர். அப்போது அவர்களிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க சென்றபோது பார்த்திபன் காரில் ஏறி சென்று விட்டார். தவெக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த சேதுபதி மாரியப்பன் பேட்டியளிக்க முடியாது எனக்கூறி தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஷெர்ரி என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மற்ற செய்தியாளர்கள், அவரது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காருக்குள் இருந்த சேதுபதி மாரியப்பனை கீழே இறங்கி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர். ஆனால் அவர் இறங்கவில்லை. அதேநேரத்தில் மற்ற நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் ஒரு செய்தியாளரின் சட்டையை பிடித்து, தாக்க முற்பட்டனர். தள்ளுமுள்ளுவில் செய்தியாளரின் மைக், தவெக நிர்வாகி ஒருவரது நெற்றியில் பட்டது. இதையடுத்து தவெகவினரும் போராட்டத்தில் குதித்தனர். அன்னதானப்பட்டி போலீசார் இருதரப்பினரிடமும் சமரசம் செய்து, அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதேபோல், விஜய் வந்த போதும், சென்ற போதும், ரசிகர்கள் பின் தொடர்ந்து போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதால் ஆம்புலன்ஸ் சிக்கி தவித்தது.

* அனுமதி கேட்டது நிர்வாகிகள் சந்திப்பு… நடத்தியது பிரசார கூட்டம்…
சேலத்தில் போலீசாரின் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டு, நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் என்ற பெயரில் தவெகவினர் அனுமதி பெற்றனர். ஆனால் இந்த கூட்டத்தை விஜய்யும், அவரது கட்சியினரும் தேர்தல் பிரசார கூட்டமாகவே மாற்றி விட்டனர். 5 ஆயிரம் பேர் மட்டுமே வருவார்கள் என்று கூறியதோடு, கியூஆர் கோடுடன் அட்டை வழங்கியுள்ளோம். அதை ஸ்கேன் செய்தால் மட்டுமே நிர்வாகிகள் உள்ளே வரமுடியும் என்று கூறினர். ஆனால் இது எதுவும் இல்லாத பொதுவான அட்டை ஒன்றை வழங்கி, தங்கள் இஷ்டத்திற்கு ஆட்களை அனுமதித்தனர். பாண்டிச்சேரியில் கூட, நிர்வாகிகள் சந்திப்பு என்ற பெயரில் அனுமதி பெற்றுவிட்டு, பின்னர் பிரசார கூட்டமாக மாற்றிவிட்டார்கள். இனி தவெகவினர் அனுமதி கேட்கும் கூட்டங்களுக்கு போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என்பதும் மக்களின் குமுறலாக இருந்தது.

* திமுக நடத்திய கூட்டத்தில் லட்சம் பேர் திரண்டும் அசம்பாவிதம் இல்லை
திமுக சார்பில் திருவண்ணாமலை, விருதுநகர் ஆகிய இடங்களில் சமீபத்தில் இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். அங்கு எந்த அசம்பாவிதமும் இன்றி அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பி சென்றனர். இதேபோல அதிமுகவிலும் கூட்டங்கள் நடந்தது. பாஜ சார்பில் மோடி பங்கேற்ற கூட்டத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அங்கும் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆனால், தவெக சார்பில் விஜய் பங்கேற்கும் கூட்டங்களில் மட்டும் ரசிகர்கள், தொண்டர்கள், பார்க்க வந்த மக்கள் பலியாவது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு கட்சி நிர்வாகிகளின் அலட்சிய போக்கே முக்கிய காரணம் என்கின்றனர்.

Related Stories: