சிவகாசி, பிப்.13: நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ஒன்றிய அரசு நிபந்தனையின்றி ரத்து செய்திட வேண்டும், 8 மணி நேர வேலையை 12 மணி நேர வேலையாக மாற்றும் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகர் மாவட்டம் முழுவதும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. சிவகாசி திருத்தங்கல் சாலை முத்துராமலிங்கதேவர் சிலை அருகில் நடைபெற்ற போராட்டத்தில் 85 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களை போலீசார் கைது செய்தனர். வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 112 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜபாளையம் தளவாய்புரத்தில் மறியலில் ஈடுபட்ட 100 பெண்கள் உட்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.
