திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமை தாங்கினார்.
மணலூர்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெய்கணேஷ், சித்தப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அம்மு ரவிச்சந்திரன் வரவேற்றார்.
பேரூராட்சி மன்ற தலைவர் ஜெய்கணேஷ் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார். அதனை தொடர்ந்து பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து கடந்த நான்கு வருடத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் நேற்று ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆலோசனையின் பேரில், மணலூர்பேட்டை பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 248 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
ஆகையால் பள்ளி மாணவ, மாணவியர்கள் இதனை பயன்படுத்தி நன்றாக படித்து தங்கள் வாழ்க்கையில் உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க மாவட்ட தலைவர்கள் சையத்அலி, சரவணன், ரவிச்சந்திரன், பொருளாளர் முபாரக், முனியன், ஆதிமூலம், ரகுபதி, பெருமாள் பள்ளி மேலாண்மை குழு சார்பாக காத்த முத்து, சேவி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
