மயிலாடுதுறை: மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பாஜ மாவட்ட மகளிர் அணி தலைவர் நர்மதா பேசுகையில், திமுக ஆட்சியில் ஆட்டோவில் செல்வதற்கு கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றார். இதை கேட்டதும், எதிரே ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் ஆவேசமடைந்தனர். அவர்கள், ஆட்டோவில் சென்றால் பாதுகாப்பு இல்லை என்று கூறி எப்படி எங்களை அவமதிக்கலாம் என்று நர்மதாவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நர்மதாவுக்கு ஆதரவாக வந்த, பாஜக நிர்வாகிகளுடனும் வாக்குவாதம் நடந்தது.
ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பையும் விலக்கி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து கூட்டம் நடந்தது. மேலும், இந்த கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு பாஜ பெண் நிர்வாகி ஒருவர், அந்த பகுதியிலேயே தலா ரூ.200 விநியோகித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
