சென்னிமலை அருகே பட்டிக்குள் புகுந்து தெரு நாய்கள் கடித்து குதறியதில் 16 ஆடுகள் பலி

சென்னிமலை : சென்னிமலை அருகே தெரு நாய்கள் பட்டிக்குள் புகுந்து கடித்து குதறியதில் 16 ஆடுகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே வெள்ளோடு ஞானிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி.

விவசாயியான இவர் தனது தோட்டத்தில் 40 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பழனிசாமி வழக்கம் போல் தனது ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில், நேற்று காலையில் பழனிசாமி பட்டிக்கு சென்று பார்த்தபோது அங்கு 16 ஆடுகள் இறந்து கிடந்தது. மேலும் 15க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த பழனிசாமி இதுகுறித்து வெள்ளோடு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், கால்நடை மருத்துவர் விரைந்து சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். தெருநாய்கள் கூட்டமாக வந்து கடித்து குதறியதால் 16 ஆடுகள் உயிரிழந்தது தெரிய வந்தது.

இறந்த ஆடுகள் அனைத்தும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய் துறையினரும் ஆடுகள் பலியானது குறித்து விசாரணை நடத்தினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளோடு அருகே தேவணம்பாளையம் பகுதியில் பட்டிக்குள் புகுந்து 11 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றது குறிப்பிடதக்கது. மேலும், தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: