தடங்கம் பகுதியில் பரபரப்பு குப்பை கொட்ட வந்த வாகனங்களுக்கு எதிர்ப்பு

*பொதுமக்கள் திருப்பி அனுப்பினர்

நல்லம்பள்ளி : தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தடங்கம் பகுதியில், நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்ட குப்பை கிடங்கு உள்ளது. நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் சேகரிக்கப்படும் டன் கணக்கிலான குப்பை கழிவுகளை, வாகனங்களில் எடுத்து வந்து இங்கு கொட்டி வந்தனர்.

மலை போல் குவிந்திருந்த குப்பை கழிவுகள் அவ்வப்போது தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதுமாக புகை மண்டலமாக காணப்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த சில நாட்களாக குப்பை கழிவுகள் கொட்டாமல் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று, நகராட்சி குப்பை கழிவுகளை 3 வாகனங்களில் எடுத்துக்கொண்டு, தடங்கம் பகுதியில் கொட்டுவதற்காக வந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள், சாலையில் டூவீலர்களை நிறுத்தி வாகனத்தை தடுத்து, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், ஊர் பொதுமக்கள் ஏற்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, வேறு வழியின்றி குப்பை கழிவுகளுடன் வாகனங்களை திருப்பி எடுத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் தடங்கம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: