பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி துணை மின் நிலையத்துக்குட்பட்ட கொளக்காநத்தம்-சாத்தனூர் சாலையில் காட்டுப்பகுதியில் ஒரு டன் எடை கொண்ட டிரான்ஸ்பார்மர் உள்ளது. இங்கிருந்து விவசாய வயல்களுக்கு மின் இணைப்பு செல்கிறது. இந்நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் இந்த டிரான்ஸ்பார்மரை இடித்து தள்ளி சேதப்படுத்தினர். இதனால் மின் இணைப்பு கூட்டானது.
அதன்பின்னர் டிரான்ஸ்பார்மரிலிருந்த 75 கிலோ காப்பர் கம்பிகள், 225 லிட்டர் டிரான்ஸ்பர் ஆயிலை திருடி சென்று விட்டனர். தகவலறிந்து வந்த கொளக்காநத்தம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், தனிப் பிரிவு ஏட்டு சுரேஷ் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. தொடர்ந்து டிரான்ஸ்பார்மரை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து மருவத்தூர் போலீசார் வழக்கு பதித்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
