*விவசாயிகள் கவலை
காங்கயம் : கொங்கு மண்டலத்தில் பாரம்பரிய சின்னமாக விளங்கும் கொரங்காடுகள் அழிந்து வருவதால் காங்கயம் காளைகளுக்கு தேவையான புற்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கொரங்காடுகள் என்பவை புற்கள், செடிகள், மரங்கள் அடங்கிய பல்லுயிர் சூழலுக்கான மேய்ச்சல் நிலங்களாகும்.
வறண்ட புல்வெளி காடுகளே மேற்கு மண்டல கால்நடைகளுக்கு முக்கியத்துவத்தை பெற்று தந்தன. இங்கு வளரும் வெள்ளை வேல மரம், கொழுக்கட்டான் புல், ஒட்டன் புல், வென்னம்புல், குருத்துபுல், சோளப்புல், நரிப்பயிர் கொடி, நெரிஞ்சி, பூனைப்புடுகு கொடி, பீளைப்பூ செடி, ஆவாரஞ்செடி, அருகம்புல், நத்தை சூரி, சவரிக்கொடி, கானப்பயிர், ஒரம்பூ பூடு மற்றும் மரங்கள், கொடிகள், ஒற்றை இலை, இரட்டை இலை தாவரங்கள் காங்கயம் இன காளைகளுக்கு சிறந்த உணவாகும்.
காளைக்கு உடல் வலிமைக்கும், திறனுக்கும் சத்தான, நோய் எதிர்ப்பு திறனுடைய தீவனங்களை தருபவை கொரங்காடுகள். நாளடைவில் தொழில் வளர்ச்சி, வேலை தேடி வரும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், புதிய தொழிற்சாலைகள் போன்றவற்றால் இப்பகுதியில் உள்ள நிலங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
இதனால், பெரிய எண்ணிக்கையில் இருந்த கொரங்காடுகள் வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாற்றப்பட்டன. பருவ மழையும் சரியாக பெய்வதில்லை. இதனால், கொரங்காடுகளில் கொழுக்கட்டான் புல் வறண்டு அழிந்து வருகிறது. எனவே, கொங்கு நாட்டின் பாரம்பரிய சின்னமாகவும், இயற்கை வளமாகவும் இருக்கும் கொரங்காடுகளை பாதுகாக்க அரசு மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
