வேளச்சேரி ரயில் நிலையத்தில் நவீன விளையாட்டு மையம் திறப்பு: சென்னை கோட்டத்தின் புதுமையான முயற்சி

சென்னை: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் முதன்முறையாக, வேளச்சேரி ரயில் நிலையத்தில் பொதுமக்களுக்கான நவீன வெளிப்புற விளையாட்டு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் பயன்பாடின்றி இருக்கும் காலியிடங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தவும், அதே வேளையில் வருவாயை ஈட்டவும் தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னை கோட்டத்தின் கூடுதல் ரயில்வே மேலாளர் தேஜ் பிரதாப் சிங், வேளச்சேரி ரயில் நிலையத்தில் நவீன விளையாட்டு மையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் முதுநிலை கோட்ட வணிக மேலாளர் பரத் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டு மையத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை கவரும் வகையில் ‘பாக்ஸ் கிரிக்கெட்’ , ‘பிக்கிள்பால்’ மைதானம் மற்றும் ஸ்கேட்டிங் தளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தமிழர்களின் பாரம்பரியக் கலையான சிலம்பம் பயிற்சிக்கான தனி இடவசதியும் செய்யப்பட்டுள்ளது. ஐந்தாண்டு உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.64.09 லட்சமாகும். பயணிகளுக்கான அடிப்படை சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, ரயில்வே துறைக்கு இதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.12.07 லட்சம் கட்டணமில்லா வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி ரயில் நிலையத்தை ஒரு சமூகச் செயல்பாட்டு மையமாக மாற்றும் இந்த முயற்சி, அப்பகுதி மக்களிடையே உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் என ரயில்வே நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related Stories: