சென்னை: அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராக கருதப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர், பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த 2019 ஆகஸ்ட் 10ம் தேதி நியூயார்க் சிறையில் அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அதற்கு பிறகு அவர் வைத்திருந்த கோப்புகள், ‘எப்ஸ்டீன் பைல்ஸ்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. அந்த பைல்ஸில் பிரிட்டீஷ் இளவரசர் ஆண்ட்ரூ, பில் கிளிண்டன், பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் போன்ற உலகம் முழுவதும் இருக்கும் ஏராளமான பிரபலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் சில முக்கிய நபர்களுடன் உரையாடிய சில மின்னஞ்சல்களில், ஒரு நிகழ்ச்சிக்கு பாலிவுட் இயக்குனர் ஒருவர் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இயக்குனர் அனுராக் காஷ்யப் என்று தகவல் பரவி வருகிறது. இந்த சர்ச்சை குறித்து பதிலளித்த அனுராக் காஷ்யப், ‘இதுபற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது. மேடையில் பேசுவதற்காக, ஒரு மாதத்தில் சுமார் 15 அழைப்புகளாவது எனக்கு வரும். அதற்கெல்லாம் நான் மிகவும் அரிதாகவே பதிலளிப்பேன். மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெய்ஜிங் பகுதிக்கு நான் சென்றதில்லை.
இது சீரற்ற முறையில் சிலருக்கு வரும் மின்னஞ்சல். அந்த மின்னஞ்சலே அதற்கு விளக்கம் அளிக்கிறது. எனது பெயரில் வெளியாகும் தகவல்கள், நான் இயக்கும் படங்களை விட பிரபலமாக இருக்கிறது’ என்றார். பாலிவுட்டில் முன்னணி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் அனுராக் காஷ்யப், தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘லியோ’, ‘மகாராஜா’, ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து பல மொழிப் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். எப்போதுமே அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு, அதற்கு விளக்கம் அளித்து பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம்.
