அரசியல் எங்க பண்றாரோ… அங்க தான் சீட் கேட்பாங்க… பனையூரில் விஜய் போட்டியிடணுமாம்…

* இல்லாத தொகுதிக்கு வழித்தேடும் நண்பா, நண்பீஸ், தவெகவில் நடக்கும் விருப்ப மனு கலாட்டா

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுகிறது. கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் வரும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் எதிர்பார்த்து இருந்தார். ஆனால், யாரும் தவெகவுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. அது மட்டுமல்லாமல் நிறைய ஆபர் வேற அளித்தார். கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி மற்றும் அமைச்சர் பதவி தரப்படும் என்று ஆசை வார்த்தை எல்லாம் கூறி கட்சிகளை அழைத்தார். ஆனால், யாரும் விஜய்யின் இந்த ஆபரை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த விஜய், தனித்து போட்டி என்ற முடிவுக்கு வந்தார். இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் வாங்கப்படும் என்று தவெக தலைமை அறிவித்தது. இந்த விருப்ப மனு விநியோகம் பனையூர் 8வது அவென்யூவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. விருப்ப மனு விநியோகத்தை தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன், நிர்மல்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் பொது தொகுதியில் போட்டியிடுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம், தனி தொகுதிக்கு ரூ.5 ஆயிரம் என விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏராளமான ஆண்களும், பெண்களும் விருப்ப மனுக்களை ஆர்வமுடன் வாங்கி, அவற்றை உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து, உரிய கட்டணங்களுடன் திரும்ப ஒப்படைத்தனர். நிறைய பேர் ரூ.100 கொடுத்து விருப்ப மனுக்களை மட்டும் வாங்கி சென்றனர்.

இதனால் தான் அதிகமாக விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விருப்பமனு விநியோகம் குறித்து துணை பொது செயலாளர் நிர்மல்குமார் அளித்த பேட்டியில், ஒன்றரை மணி நேரத்தில் 10 ஆயிரம் விருப்ப மனுக்கள் ஒரே நாளில் கொடுக்கப்பட்டுள்ளது. 14ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மனுக்களை பெற்றுக்கொள்ளலாம். எனவே ஒரே நாளில் அனைவரும் வராமல் பொறுமையாக வாங்கிக் கொள்ளலாம்,’ என்றார்.

தவெகவில் நேற்று விருப்ப மனு தொடங்கியதும், கட்சி தலைவர் விஜய், பனையூரில் போட்டியிட வேண்டும் என்று நிறைய பேர் விருப்ப மனு அளித்ததாக கூறப்படுகிறது. பனையூர் என்றே தொகுதி கிடையாது. பனையூர் சோழிங்கநல்லூர் தொகுதியில் வருகிறது. அப்படியிருக்கும் போது பனையூரில் விஜய் போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு அளித்து உள்ளது, இல்லாத ஊருக்கு வழி தேடுறது மாதிரி, இல்லாத தொகுதிக்கு மனுவா? என கேட்டு, தவெகவினர் தற்குறிகள் என்று நிரூபித்து உள்ளதாக நெட்டிசனக்ள் கலாய்த்து வருகின்றனர்.

ரசிகர்கள் சொல்வது கரெக்ட் தாங்க… விஜய் பனையூரில் மட்டும்தான் அரசியல் பண்றாரு… அதான் தலைவன் எவ்வழியோ, ரசிகர்கள் அவ்வழியே என்று நிரூபித்து உள்ளதாக வறுத்தெடுத்து வருகின்றனர். முன்னதாக, தவெக சார்பில் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில், என்னென்ன அம்சங்களை சேர்க்கலாம் என்பதை மக்களிடம் இருந்து கருத்துகளை அறிவதற்கு, தவெக சார்பில் புதிய இணையதள பக்கத்தை தவெக தலைவர் விஜய் நேற்று அறிமுகப்படுத்தினார். இதில் பலர் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இவற்றை தவெக தேர்தல் பணி குழுவினர் முழுமையாக ஆய்வு செய்து, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

* விஜய்க்கு ஐடி அபராதம் ஐஆர்எஸ் புது உருட்டு
கொள்கை பரப்பு பொது செயலாளர் அருண்ராஜ் அளித்த பேட்டியில், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன். நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பொதுத் தொகுதிகளிலும் (தனி தொகுதிகளைத் தவிர) விஜய் போட்டிட வேண்டும்’’ என்றார். தவெக தலைவர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பான கேள்வி எழுப்பினர்.

இதற்கு அருண் ராஜ், நான் ஏற்கனவே வருமான வரித்துறையில் பணியாற்றியவன் என்ற முறையில் கூறுகிறேன். வரி செலுத்துவோருக்கு மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு. முன்னதாக இந்த விவகாரத்தில் தனி நீதிபதி இடைக்கால தடை விதித்திருந்தார். தற்போது வந்துள்ள உத்தரவு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: