இன்று நடைபெறும் விருதுநகர் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு திராவிட மாடல் ஆட்சியே தொடரும் என்னும் வெற்றி செய்திக்கு அடித்தளமாக அமையும்: திமுக இளைஞர் அணி உறுதி

சென்னை: இன்று நடைபெறும் விருதுநகர் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு, திராவிட மாடல் ஆட்சியே தொடரும் என்னும் வெற்றி செய்திக்கு அடித்தளமாக அமையும் என்று திமுக இளைஞர் அணி கூறியுள்ளது. திமுக இளைஞர் அணி நேற்று வெளியிட்ட அறிக்கை: 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் என்று வலுவான கட்டமைப்பைக் கொண்டு செயற்படும் இளைஞர் அமைப்பு, இந்திய அளவில் திமுக இளைஞர் அணி மட்டுமே.

பல அரசியல் கட்சிகள் வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பதற்கே திணறிக்கொண்டிருக்கும் சூழலில், அனைத்து பாகங்களிலும் நிர்வாகிகளை நியமித்திருப்பது திமுக இளைஞர் அணியே. இப்படி நியமிக்கப்பட்ட 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பை நடத்த வேண்டும் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பை 14.12.2025, அன்று மாலை 4 மணியளவில் திருவண்ணாமலை கலைஞர் திடலில் எழுச்சியுடன் நடத்தினோம்.

1.50 லட்சம் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதன் அடுத்த கட்டமாக தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பை 7ம் தேதி (இன்று) மாலை 3 மணியளவில், விருதுநகர் கல்குறிச்சியில் நடத்தவிருக்கிறோம். இந்த ‘தென் மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்’பில் திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றவிருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவரே மீண்டும் முதல்வர் ஆவார், திராவிட மாடல் ஆட்சியே தொடரும் என்னும் வெற்றிச்செய்திக்கு அடித்தளமாக இந்த ‘இளைஞர் அணி மண்டல நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும் என்பது உறுதி.

Related Stories: