* தவெக தலைமை அலுவலகம் அருகே இருக்கும் குடியிருப்புவாசிகள் சரமாரி புகார், கேள்வி கேட்ட மக்களுடன் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
சென்னை: பனையூரில் உள்ள 6 தெருக்களில் இயல்பாக இருக்கவே முடியவில்லை. வாகனங்களை வீட்டின் முன்பு நிறுத்துகிறார்கள், தடுப்புகளை அமைக்கின்றனர் என்று தவெக தலைமை அலுவலகம் அருகே இருக்கும் குடியிருப்புவாசிகள் சரமாரியாக நேற்று புகார் அளித்தனர். இது குறித்து கேள்வி கேட்ட மக்களுடன் கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகம் சென்னையை அடுத்த பனையூர் 8வது அவென்யூவில் அமைந்துள்ளது.
கட்சி அலுவலகத்திற்கு வரும் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை அப்பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் வீடுகளுக்கு முன்பு நிறுத்தி விட்டு செல்கின்றனர். மேலும் அங்குள்ள சாலைகளில் சாலை தடுப்புகள் வைப்பதால் அவ்வழியே வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனை குடியிருப்புவாசிகள் பொறுத்து பொறுத்து பார்த்தனர். ஆனால் நிலைமை சரியாகவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த குடியிருப்புவாசிகள் நேற்று அங்கு ஒன்று திரண்டு இப்படி வாகனங்களை நிறுத்துவதா என்று நியாயம் கேட்டனர்.
மேலும் எங்களிடம் கேட்காமல் எப்படி பேரிகார்டு வைப்பது, பேரி கார்டு போட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. இவ்வளவு பேர் வந்து இருக்கீங்களே, உங்கள் வீடு முன்னாடி இப்படி வாகனங்களை நிறுத்தினால் சும்மா இருப்பீங்களா? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதனால் தவெக நிர்வாகிகளுக்கும் குடியிருப்புவாசிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரச்னை பெரிதானதை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அங்கிருந்த குடிசைவாசிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில், ”வீடுகளுக்கு முன்பாக கார்களை பார்க்கிங் செய்கிறார்கள். எங்களை இப்படி போகாதீர்கள், அப்படி போகாதீர்கள் என்கிறார்கள். எங்களுடைய கார் வந்தால் விட மாட்டேங்கிறார்கள்.
அது இல்லாமல் எங்களுடன் சண்டை போடுகிறார்கள். எதாவது சொன்னால் நகருவதில்லை. நீங்கள் பாட்டுக்கு சொல்லுங்கள் என்று அவர்கள் பாட்டுக்கு இருக்கிறார்கள். 6வது அவென்யூவில் இருந்து 11வது அவென்யூ வரை இப்படி தான் லாக் பண்றாங்க. இதை மாதக்கணக்கில் நாங்கள் அனுபவித்து வருகிறோம். எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. அதனால் தான் குடியிருப்புவாசிகள் இது தொடர்பாக வெளியே வந்து பேச தொடங்கினோம்.
இவர்கள் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அதற்குள் குடியிருப்பு பகுதிகளில் இவ்வளவு பிரச்னை. வீட்டு வேலை செய்பவர்களை கூட விட மாட்டேங்கிறார்கள். ஓனர் வந்து அவர்களிடம் பேசி வீட்டிற்குள் அழைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எல்லா தெருக்களிலும் பேரி கார்டு போட யார் அனுமதி கொடுத்தது. உடனடியாக பேரிகார்டுகளை அகற்ற வேண்டும். ரோடுகளுக்கு வெளியே கார்களை நிறுத்தி விட்டு, அலுவலகத்திற்கு வர வேண்டியது தானே.
போலீஸ்காரர்களிடம் கேட்டால் யாருக்கும் பேரி கார்டு போட அனுமதி வழங்கவில்லை என்கிறார்கள். அதனால், தான் நாங்கள் வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். கட்சி அலுவலகத்திற்குள் என்ன நடந்தாலும் எங்களுக்கு பிரச்னை இல்லை. பெரிய நிகழ்ச்சி நடந்தால் கல்யாண மண்டபத்தில் நடத்த வேண்டியது தானே?. தெருக்களில் ஏற்படும் இந்த பிரச்னைக்கு எல்லாம் கட்சியின் தலைவர் விஜய் தான் பதில் சொல்ல வேண்டும்” என்றனர்.
