உக்ரைனுக்கு எதிரான போரில் வெளிநாட்டவர்களை பலிகடா ஆக்கும் ரஷ்யா: வேலை, குடியுரிமை தருவதாக சட்டவிரோதமாக சேர்க்கும் அவலம்

மாஸ்கோ: ரஷ்யாவில் சொற்ப சம்பளம் வாங்குபவர்கள் அதிகமாக சம்பாதிக்க அருமையான வாய்ப்பு… சிறையில் கடுமையான தண்டனைகளை அனுபவிப்பவர்கள் தப்பித்து சுதந்திரமாக வெளியில் வர அருமையான வாய்ப்பு… சிறந்த வாழ்க்கையை எதிர்பார்க்கும் வெளிநாட்டவர்கள் எளிதாக குடியுரிமை பெறுவதற்கான அருமையான வாய்ப்பு… அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், உக்ரைனில் போரிடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதுதான். இப்படித்தான் 4 ஆண்டு காலமாக உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தனது படை பலத்தை பெருக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைனுக்கு எதிராக 4 ஆண்டுகளாக நடக்கும் போரில் யுத்தகளத்திற்கு அனுப்ப சொந்த நாட்டில் யாரும் தயாராக இல்லாததால் வெளிநாட்டவர்களை ஏமாற்றி அவர்களை ரஷ்யா பலிகடா ஆக்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த 2022ல் போர் தொடங்கியதும், உக்ரைனில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டு, தேசத்தை பாதுகாக்க உள்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவில் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். ஆனால் ரஷ்ய அதிபர் புடின் அவ்வாறு செய்யவில்லை. போர் தொடங்கியதும், புதிய ராணுவ வீரர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கை ரஷ்யாவிலும் எடுக்கப்பட்டது. புதிதாக 3 லட்சம் பேரை சேர்க்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கும் எட்டப்பட்டது. ஆனால் புடின் அத்திட்டத்தை கைவிடச் செய்தார். அதற்கு காரணம், பலரும் போரிட பயந்து ரஷ்யாவிலிருந்து வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றனர்.

இதனால் உள்நாட்டினரை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக வேறு வழிகளை புடின் கையாளத் தொடங்கினார். ராணுவ வீரர்கள் கட்டாய ஓய்வு பெறுவதற்கு தடை விதித்தார். கடுமையான காயம் அல்லது போதிய வயதை தாண்டியவர்கள் மட்டுமே ராணுவத்திலிருந்து வெளியேற முடியும். மற்றபடி, ராணுவத்தில் உள்ளவர்கள் உக்ரைனுடன் சண்டையிட்டே ஆக வேண்டுமென விதிகளை கடுமையாக்கினார். அடுத்ததாக உக்ரைனுக்கு எதிரான போரில் தாமாக முன்வந்து யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்கிற தன்னார்வ ஒப்பந்தத்தை கொண்டு வந்தார்.

இந்த ஒப்பந்தத்தில் தாமாக முன்வந்து சேர்பவர்களுக்கு பல சலுகைகள் தரப்படுகின்றன. நல்ல சம்பளம், குடியுரிமை, சிறையிலிருந்து விடுதலை கூட செய்யப்படுகின்றனர். இதனால், தன்னார்வமாக ராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வீரர்களின் எண்ணிக்கை வலுவாகவே உள்ளது. கடந்த ஆண்டு இது 4 லட்சத்தை தாண்டியது என்று புடின் டிசம்பரில் கூறினார். 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளிலும் இதே போன்ற எண்ணிக்கைகள் அறிவிக்கப்பட்டன.
இந்த ஒப்பந்தங்கள் பெரும்பாலும் ஒரு வருடம் போன்ற ஒரு குறிப்பிட்ட கால சேவையைக் குறிப்பிடுகின்றன.

இதனால் இந்த அர்ப்பணிப்பு தற்காலிகமானது என ரஷ்ய ராணுவத்தில் சேரும் ஆர்வலர்கள் நம்புகின்றனர். ஆனால் ஒப்பந்தங்கள் தானாகவே காலவரையின்றி நீட்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தன்னார்வமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்தவர்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அல்லது போரில் மடிந்து உயிர்த்தியாகம் செய்கின்றனர். அத்தகைய தியாகிகளுக்கு மரணத்திற்கு பிறகு ரஷ்ய அரசு எந்த பலன்களையும் வழங்காது என்பதும் விதிமுறைக்கு உட்பட்டது. உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை எத்தனை வீரர்கள் இறந்தார்கள் என்ற தகவலை ரஷ்யா அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

குறைந்த அளவிலான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை மட்டுமே வெளியிட்டுள்ளது. கடந்த 2025 ஜூன் வரையிலும் 10 லட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. சுயாதீன ரஷ்ய செய்தித் தளமான மீடியாசோனா உள்ளிட்ட ஊடகங்கள் அரசாங்க வலைத்தளங்களை ஆய்வு செய்து, கொல்லப்பட்ட 1,60,000-க்கும் மேற்பட்ட வீரர்களின் பெயர்களைச் சேகரித்துள்ளது. அவர்களில் 550க்கும் மேற்பட்டோர் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் ஆவர்.

ரஷ்யாவில் போதிய ஆவணம் இன்றி தங்கி வேலை பார்ப்பவர்கள் இத்தகைய தன்னார்வ ராணுவ சேவையில் ஈடுபட அழுத்தம் கொடுக்கப்படுகின்றனர். சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என ஆசை வார்த்தை கூறி தன்னார்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைக்கப்படுகின்றனர். இதை தாண்டி, ரஷ்யாவில் வேலை என வெளிநாட்டு இளைஞர்களை ஏமாற்றும் ஏஜென்ட்கள் பலர், தன்னார்வ ராணுவ சேவையில் ஈடுபடும் ஒப்பந்தத்தில் அவர்களை கையெழுத்திட வைக்கின்றனர். இதுபோல, இந்தியா, நேபாளம் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஆண்கள், வேலை வழங்குவதாக உறுதியளித்த ஆட்சேர்ப்பு ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட்டு போரில் சேர கையெழுத்திட்டதாகப் புகார் கூறுகின்றனர்.

கென்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் அதிகாரிகளும் தங்கள் நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் இதே போன்றது நடந்ததாகக் கூறுகின்றனர். 2023ம் ஆண்டில், ரஷ்யாவிலிருந்து செயல்பட்ட அத்தகைய ஒரு மோசடி ஏஜென்ட் கும்பலை கியூபா அதிகாரிகள் அடையாளம் கண்டு, அதை முறியடிக்க முயன்றனர். 2024ம் ஆண்டில், நேபாளத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் நாராயண் பிரகாஷ் சவுத், உக்ரைனில் சண்டையிடுவதற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான நேபாள நாட்டினரைத் திருப்பி அனுப்புமாறும், போரில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை சொந்த நாட்டிற்கு கொண்டுவர உதவுமாறும் ரஷ்யாவைக் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

இத்தகைய மோசடிகளால், நேபாளம் தனது குடிமக்கள் வேலைக்காக ரஷ்யா அல்லது உக்ரைனுக்குப் பயணம் செய்ய தடை விதித்துள்ளது. இதே போல, 2024ம் ஆண்டில், இந்தியாவிலும் வேலைவாய்ப்பு என்ற போர்வையில் 35 பேர் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டதாக புலனாய்வு அமைப்புகள் குற்றம்சாட்டின. அப்போது, புடினை சந்தித்த பின் பிரதமர் மோடி, ரஷ்ய ராணுவத்தில் சேருமாறு தவறாக வழிநடத்தப்பட்ட இந்திய நாட்டினர் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

சுமார் 5,000 ஈராக் மக்கள் ரஷ்ய ராணுவத்தில் இணைந்துள்ளனர் என்றும், அவர்களில் பலர் உக்ரைனுக்கு எதிராக சண்டையிடுகின்றனர் என்றும் ஈராக் அதிகாரிகள் கூறுகின்றனர். பாக்தாத்தில் இத்தகைய ஆட்சேர்ப்பு நெட்வொர்க்கை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, மனிதக் கடத்தல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். சம்பளம், ரஷ்ய குடியுரிமைக்காக தாமாக முன்வந்து உக்ரைன் போரில் ஈடுபட்ட பல ஈராக்கியர்கள் பலியாகி இருப்பதாகவும் அந்நாட்டு அரசு கூறுகிறது. போர்க் கைதிகளைக் கவனிக்கும் உக்ரேனிய அமைப்பு ஒன்று, 18,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் ரஷ்யத் தரப்பில் சண்டையிட்டனர் அல்லது சண்டையிட்டு வருகின்றனர் என்று சமீபத்தில் கூறியது.

அவர்களில் கிட்டத்தட்ட 3,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 40 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடிமக்கள் உக்ரைனில் போர்க் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளது.
வாஷிங்டனைச் சேர்ந்த போர் ஆய்வுக்கான நிறுவனம் என்ற அமைப்பின் ரஷ்ய ஆய்வாளர் கேடரினா ஸ்டெபனென்கோ கூறுகையில், ‘‘கடந்த 2 ஆண்டுகளில் வெளிநாட்டினர் உட்பட ராணுவ வீரர்களை ஈர்ப்பதில் ரஷ்யா தீவிரமாக செயல்பட்டுள்ளது. ஆனால், மந்தமடைந்து வரும் அதன் பொருளாதாரத்தால், இந்த ஆள்சேர்ப்பு முயற்சிகள் ரஷ்யாவுக்கு அதிக செலவு மிக்கதாக மாறி வருகின்றன’’ என தெரிவித்துள்ளார். விரைவில் ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வந்தால் மட்டுமே இத்தகைய சட்டவிரோத சம்பவங்களுக்கு தீர்வு கிடைக்கும் என மனிதநேய ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

* அறியாமல் சிக்கி சீரழியும் வங்கதேச வாலிபர்கள்
ரஷ்ய ராணுவத்தில் இருந்து வங்கதேசத்தை சேர்ந்த மாக்சுதூர் ரஹ்மான் உட்பட 3 பேர் தப்பித்து சொந்த நாட்டிற்கு ஓடி வந்துள்ளனர். இது குறித்து ரஹ்மான் கூறியதாவது: ரஷ்யா குளிரான நாடு, நல்ல சம்பளம் என ஆசைகாட்டி அங்கு துப்புரவு பணிக்காக ஏஜென்ட் மூலம் அனுப்பப்பட்டேன். என்னுடன் குழுவாக சிலர் வங்கதேசத்தில் இருந்து வந்திருந்தனர். அவர்களிடம் தொழிலாளர்களுக்கான ஆவணம் என ஏமாற்றி ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தனர். பின்னர் எங்களுக்கு டிரோன் போர் நுட்பங்கள், மருத்துவ உதவி நடைமுறைகள் மற்றும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அடிப்படைப் போர் திறன்களுக்கான பயிற்சி தரப்பட்டது.

இந்த வேலைக்காக வரவில்லை என ரஷ்ய தளபதி ஒருவரிடம் நான் கூறிய போது கடும் கோபமான அவர் ‘‘உங்கள் ஏஜென்ட் இந்த வேலைக்காக தான் உங்களை அனுப்பினார். நாங்கள் உங்களை விலைக்கு வாங்கி விட்டோம்’’ என்றார்.
நானும் எனது நாட்டை சேர்ந்த 2 பேரும் ரஷ்யப் படைகளுக்கு முன்னால் முன்னேறுவது, பொருட்களைக் கொண்டு செல்வது, காயமடைந்த வீரர்களை வெளியேற்றுவது மற்றும் இறந்தவர்களின் உடல்களை மீட்பது உட்பட முன்வரிசைப் பணிகளை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டோம். வேலை செய்யாவிட்டால் அடித்து உதைப்பார்கள். 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என மிரட்டுவார்கள். 7 மாத கொடுமைகளுக்குப் பிறகு தான் அங்கிருந்து தப்பி வந்தேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இது குறித்து, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஆகியவை கேள்விகளுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என சர்வதேச செய்தி நிறுவனம் கூறி உள்ளது.

* மனித கேடயமாகும் வெளிநாட்டவர்கள்
ராணுவத்திலிருந்து தப்பிச் செல்ல உதவும் இடிடே லெசோம் என்ற அமைப்பை சேர்ந்த அன்டன் கோர்பட்சேவிச் கூறுகையில், ‘‘ரஷ்யாவுக்கு ஏமாற்றி அழைத்து வரப்பட்டு போரில் ஈடுபடுத்தப்படுபவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்களுக்கு ரஷ்ய மொழி தெரியாது. ராணுவ அனுபவமும் இருக்காது. அவர்கள் பயனற்றவர்கள் என ராணுவ தளபதிகளால் கருதப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் மனித கேடயமாக கூட பயன்படுத்தப்படுகின்றனர்’’ என்றார்.

* தாமாக முன்வந்து வீரர்களை பலி கொடுத்த வடகொரியா
கடந்த 2024-ல் ரஷ்யாவுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, குர்ஸ்க் பிராந்தியத்தைப் பாதுகாப்பதில் ரஷ்யாவிற்கு உதவுவதற்காக வட கொரியா ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்பியது. அவர்களுக்கு ரஷ்யா போர் பயிற்சியும் அளித்தது. ஆனாலும், வடகொரியா வீரர்கள் பலர் போரில் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* நல்ல சம்பளம் கிடைக்கும்
ரஷ்ய ராணுவத்தில் தன்னார்வத்துடன் சேருபவர்களுக்கு அதிக ஊதியம் மற்றும் விரிவான சலுகைகள் வழங்கப்படுகிறது. போனஸ்களும் உண்டு. சில சமயங்களில் இது பல்லாயிரக்கணக்கான டாலர்கள் வரை இருக்கும். உதாரணமாக, மத்திய ரஷ்யாவின் காந்தி-மான்சி பிராந்தியத்தில், ஒரு வீரர் பல்வேறு போனஸ்களாக சுமார் ரூ.45 லட்சம் வரையிலும் பெறுவார் என்று உள்ளூர் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இது அந்தப் பிராந்தியத்தின் சராசரி ஆண்டு வருமானத்தை விட 2 மடங்கு அதிகம். 2025ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மாதச் சம்பளம் ரூ.1.5 லட்சத்துக்கும் சற்று அதிகமாக இருந்ததாகத் கூறப்படுகிறது. இதுதவிர, வரிச் சலுகைகள், கடன் தள்ளுபடி மற்றும் பிற சலுகைகளும் பெறலாம்.

Related Stories: