தலை குனிந்து வெளிநாட்டு கடன் வாங்கும் நிலை: பாக். பிரதமர் ஷெரிப் வேதனை

இஸ்லாமாபாத்: வெளிநாட்டுக் கடன்களை பெறுவது பாகிஸ்தானை தலைகுனிய வைத்து, சுயமரியாதையை இழந்து சமரசங்களை செய்ய நிர்பந்தித்ததாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில், முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை கவுரவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் பேசுகையில், ‘‘நாங்கள் பதவியேற்றபோது பொருளாதார நிலைமை மிகவும் பலவீனமாக இருந்தது. மேலும் சாமானிய மக்கள் கடுமையான கஷ்டங்களை எதிர்கொண்டனர்.

கடினமான காலங்களில் நட்பு நாடுகள் பாகிஸ்தானுக்கு முழுமையாக ஆதரவு அளித்தன. ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனிருடன் இணைந்து பில்லியன் கணக்கான டாலர் கடன்களை பெறுவதற்காக பல நாடுகளின் தலைவர்களை சந்தித்தேன். நட்பு நாடுகளிடம் நாங்கள் கடன் கேட்ட விதத்தை எப்படி சொல்வது? நட்பு நாடுகள் எங்களை ஏமாற்றவில்லை. ஆனால் கடன் கேட்கச் செல்பவனின் தலை குனிந்து தான் இருக்கும். கடன்கள் நிறைவேற்றப்படவேண்டிய கடமைகளையும் உருவாக்குகின்றது. கடன் கேட்கச் செல்லும்போது சுயமரியாதையை இழந்து அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும். நீங்கள் சமரசம் செய்து கொள்ள வேண்டும்.” என்றார்.

Related Stories: