சென்னை: நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் புதிய நடைமுறையை கைவிட்டு மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும் என சட்டப்பேரவையில் ஒன்றிய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஒன்றிய அரசு, கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு வேரறுக்கக்கூடிய வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை மாற்றி, அதற்குப் பதிலாக “வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்” என்று தமிழில் பொருள்படும் ‘ஜி ராம் ஜி’ என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தை, அறிமுக நிலையிலேயே நமது நடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாகக் குரல் எழுப்பியிருக்கிறது. எனினும் மக்கள் குரலை மதிக்காத ஒன்றிய அரசு, அந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. இந்த புதிய திட்டமானது, மக்களின் தேவையின் அடிப்படையிலே அமைக்கப்படவில்லை. இதுகுறித்து நான் ஏற்கெனவே பிரதமருக்கு கடந்த மாதம் 18ம் தேதி கடிதம் எழுதியிருக்கிறேன். எனவே தங்கள் அனுமதியோடு இப்பேரவையில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டு நான் முன்மொழிகிறேன்.
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், 2005-ன்படி, கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டுமென்றும், மக்களின் வேலைக்கான தேவைக்கேற்பவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மாநில செயல்திறன் அடிப்படையிலும் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்வது உறுதி செய்யப்பட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பெரும்பான்மையாக பலனடைந்து வந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதுகாக்கப்பட, சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்திட முந்தைய ஆண்டுகளின் ஒதுக்கீட்டிற்கு குறையாமல் ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் தன்னிச்சையாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் எனவுள்ள தற்போதைய புதிய நடைமுறையை கைவிட்டு, ஏற்கனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் பின்பற்றப்பட்ட வேலைக்கான தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை தொடர வேண்டும். இந்த புதிய திட்டத்தில் மாநில அரசின் நிதிப்பங்களிப்பு 40 சதவிகிதமாக உயர்த்தப்படுகையில் மாநில அரசின் நிதிச்சுமையை கணிசமாக அதிகரிப்பதாக உள்ளது. எனவே, புதிய திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பினை போலவே திருத்தி அமைக்கப்பட வேண்டும். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, பல்வேறு உள்நோக்கங்களை கொண்டு இத்திட்டத்திற்கு ‘வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் – ஊரகம் ஜி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி இந்த தேசத்திற்கு வகுத்து தந்த கொள்கைகளையும், வழிகாட்டிய பாதையையும் எப்போதும் நினைவுகூரும் வகையில் இத்திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டுமென்றும் ஒன்றிய அரசை இந்த பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இந்த தீர்மானத்தை சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றி தரவேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து ஆர்.பி.உதயகுமார் (அதிமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), எம்.பாபு (விசிக), சின்னதுரை (மார்க்சிய கம்யூ.), மாரிமுத்து (இந்திய கம்யூ.), சின்னப்பா (மதிமுக), ஜவாஹிருல்லா (மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக) ஆகிய கட்சி உறுப்பினர் ஆதரவு தெரிவித்து பேசினர். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசினர் தனி தீர்மானம் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
