நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் நியமன விவகாரம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை தொடக்கம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: நகராட்சி நிர்வாக துறையில் அதிகாரிகள் நியமனம், ஒப்பந்தம் ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி அமலாக்க துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணி நியமனங்களுக்கு 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யுமாறும் அமலாக்கத் துறை தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதேபோல, அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யுமாறு அதிமுக எம்.பி. ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த இரு மனுக்களும் தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்பகட்ட விசாரணை தொடங்கியுள்ளதாக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் தெரிவித்து, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். தமிழக டிஜிபி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று, இறுதி வாய்ப்பாக ஜனவரி 28ம் தேதி வரை பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: