அணிவகுப்பு, கலைநிகழ்ச்சி ஒத்திகை; குமரியில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் தொடக்கம்: அண்ணா ஸ்டேடியத்தில் சீரமைப்பு பணி

நாகர்கோவில்: நாகர்கோவிலில் குடியரசு தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. நாகர்கோவில் அணிவகுப்பு ஒத்திகை, கலைநிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையும் நடந்து வருகிறது. நாட்டின் 77 வது குடியரசு தின விழா வருகிற 26ம்தேதி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடக்கின்றன. கலெக்டர் அழகு மீனா தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

எஸ்.பி. ஸ்டாலின் மற்றும் மாவட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த விழாவையொட்டி போலீசாரின் அணிவகுப்புக்கான ஒத்திகை நிகழ்ச்சி, நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. 200க்கும் மேற்பட்ட போலீசார் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

இதே போல் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையும் நடைபெற்று வருகிறது. குடியரசு தின விழாவையொட்டி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட உள்ளன. பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. கடலோர பகுதிகள், வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட இருக்கிறது.

ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடலோர பகுதிகளிலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.
இதற்கிடையே நாகர்கோவிலில் குடியரசு தின விழா நடைபெற உள்ள அண்ணா ஸ்டேடியத்தில் விழாவுக்கான முன்னேற்பாடுகளும் தொடங்கி உள்ளன. ஆயுதப்படை மைதானத்தில் இன்று மைதானத்தை சீரமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர். மாநகராட்சி ஊழியர்களும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories: