வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்றுடன் நிறைவு 12 லட்சத்து 80,668 பேர் புதிய விண்ணப்பம்: பிப். 17ல் இறுதி வாக்காளர் பட்டியல்; தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இதுவரை ஒட்டுமொத்தமாக 12 லட்சத்து 80 ஆயிரத்து 668 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றது. இதில் 6 தேசிய கட்சிகள் மற்றும் 6 மாநில கட்சிகளை சேர்ந்த சுமார் 2.72 லட்டம் வாக்குச் சாவடி அளவிலான முகவர்கள் பணியாற்றினர். திமுக, அதிமுக, பாஜகவை சேர்ந்த தலா 60,000 வாக்குச்சாவடி ஏஜெண்டுகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் வாக்காளர்கள் சரியான தகவல்களை தர உதவி செய்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை பதிவு செய்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் உள்பட 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதன் மூலம் தமிழகத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியிலிருந்து 5.43 கோடியாக குறைந்தது. இதையடுத்து, இறுதி பட்டியலில் இடம்பெறுவதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியது. அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம்பெற்றும், விவரங்கள் உறுதிப்படுத்த வேண்டியவர்களுக்கு கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க கோரி நோட்டீஸ் அனுப்பும் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

அதன் அடிப்படையில் 12 லட்சத்து 43 ஆயிரத்து 363 வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணிகள் நடைபெற்றது. இதையடுத்து, விபரங்களை சரி செய்வதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதில், வாக்காளர்களின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த நடவடிக்கை மூலம் இதுவரை ஒட்டுமொத்தமாக 12 லட்சத்து 80 ஆயிரத்து 668 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதுவரை இந்த காலகட்டத்தில் கிடைத்த விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து, பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுபவர்கள் மட்டுமே, வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: