மீஞ்சூர் 16வது வார்டில் மின்கசிவால் குடிசை வீடு எரிந்து நாசம்: 2 வெள்ளாடுகள் பலி

பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள 16வது வார்டில் ராஜேஷ் என்பவரின் குடிசை வீடு நேற்று நள்ளிரவு மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதில் 2 கர்ப்பிணி வெள்ளாடுகள் உள்பட ஆயிரக்கணக்கான மதிப்பிலான பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஆவணங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டன. இதுகுறித்து போலீசாரும் பேரூராட்சி அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள 16வது வார்டான ரெட்டிபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேஷ் (50). இவர், மீஞ்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் ஒப்பந்த கொசு ஒழிப்பு பணியாளராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இக்குடும்பத்தினர் ஒரு குடிசை வீட்டிலும், இதன் அருகே சமையலறையுடன் கூடிய மற்றொரு குடிசை வீட்டில் 2 கர்ப்பிணி வெள்ளாடுகளை வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ராஜேஷின் மற்றொரு குடிசை வீடு நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. இதனால் அந்த வீட்டுக்குள் கட்டப்பட்டு இருந்த 2 கர்ப்பிணி வெள்ளாடுகளும் வெளியே வரமுடியாமல் தீயின் பிடியில் சிக்கி உடல் கருகிய நிலையில் இறந்துவிட்டன. மேலும், அந்த வீட்டுக்குள் இருந்த பிரிஜ் உள்பட ஆயிரக்கணக்கான மதிப்புள்ள பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் மற்றம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

இதுகுறித்து தகவலறிந்ததும் மீஞ்சூர் போலீசாரும் பேரூராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படையினர் வந்து, எரிந்து கொண்டிருந்த குடிசை வீட்டில் தண்ணீரை பீய்ச்சியடித்து முற்றிலும் அணைத்தனர். இதனால் அக்கம்பக்கத்து வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசாரும் பேரூராட்சி அதிகாரிகளும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

Related Stories: