கடமலை-மயிலை ஒன்றியத்தில் இலவம் பிஞ்சு சீசன் தொடக்கம்; வவ்வால் தொல்லை அதிகரிப்பால் விவசாயிகள் கவலை

 

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்தில் இலவம் பிஞ்சு சீசன் தொடங்கிய நிலையில் வவ்வால் தொல்லை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள ஓட்டணை, கோவிலாங்குளம், வருசநாடு, தங்கம்மாள்புரம், தும்மக்குண்டு, வாலிப்பாறை, சிங்கராஜபுரம், முருக்கோடை, மணலாற்று குடிசை, ராயர்கோட்டை, வண்டியூர், வீரசின்னம்மாள்புரம், காந்தி கிராமம், காமராஜபுரம், அரசரடி, குமணன்தொழு, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் இலவந்தோப்புகள் அதிகளவில் உள்ளன. இந்த தோப்புகளில் தற்போது இலவம் பிஞ்சு சீசன் தொடங்கியுள்ளது. இதனால், வவ்வால்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது. தோப்புகளுக்கு வரும் வவ்வால்கள் இலவம் பிஞ்சுகளை கடிக்கின்றன.

இதனால், பிஞ்சுகள் சேதம் அடைகின்றன. ஒவ்வொரு தோப்புக்கும் பல ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் இலவந்தோப்புக்கு காவலுக்குச் செல்லும் விவசாயிகள் பட்டாசு வெடித்தும், சத்தமிட்டும் வவ்வால்களை விரட்டி வருகின்றனர். இது குறித்து வருசநாடு விவசாயிகள் கூறுகையில், ‘ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்களில் வவ்வால்கள் வந்து இலவம் பிஞ்சுகளை கடித்து காயப்படுத்துகின்றன. இதனால், மகசூல் பாதிக்கப்படுகிறது. இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். விவசாயி ரமேஷ் கூறுகையில், ‘ஒரு கிலோ இலவம் பிஞ்சு ரூ.85 முதல் 100 வரை விலை போகிறது.

மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் வந்து வாங்கிச் செல்கின்றனர். தற்போது இலவம் பிஞ்சு சீசன் களை கட்ட தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக இருப்பு வைத்திருந்த இலவம் பிஞ்சுவின் விலை தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதேபோல இலவம் பஞ்சு கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது. இடைத்தரகர்கள் இலவம் பஞ்சையும், பிஞ்சையும் மொத்தமாக வாங்கி குடோன்களில் இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்கின்றனர். எனவே, விவசாயிகளுக்கும் நியாயமான இலாபம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

 

Related Stories: