சென்னை: புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு இந்தியில் கர்தவ்ய த்வார் என பெயர் வைத்ததற்கு SDPI தலைவர் நெல்லை முபாரக், டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக டிடிவி தினகரன் தெரிவித்ததாவது; திருச்சி ரயில்வே மண்டல மேலாளர் அலுவலக நுழைவாயிலில் தமிழில் பெயர் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வகையில் அதிகாரிகளுக்கு ரயில்வே துறை அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்; ஏராளமான ரயில் பயணிகளும் வந்து செல்லும் ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகத்தில் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதி வைக்க வேண்டிய பெயர்ப் பலகையை ஹிந்தியில் மட்டுமே எழுதி வைத்திருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, SDPI தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ள கண்டனத்தில்; இது இந்தி திணிப்பின் மற்றொரு வெளிப்பாடு. ஒன்றிய பாஜக அரசு தற்போது ‘மொழி ஒன்று – வரிவடிவம் மூன்று’ என்ற புதிய தந்திரத்தைக் கையாண்டு வருகிறது. இந்திச் சொற்களையே தமிழ் மற்றும் ஆங்கில வரிவடிவங்களில் (Transliteration) எழுதி, அது எல்லா மொழிகளிலும் இருப்பதாக ஒரு மாயையை உருவாக்குகிறது” இவ்வாறு கூறியுள்ளார்.
