சென்னை: வாங்கிய 55 ஆயிரம் லேப்டாப்களை வீணடித்தவர் லேப்டாப் பற்றி எல்லாம் பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா? என அமைச்சர் சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எடப்பாடி ஆட்சியில் 2019ம் ஆண்டிலேயே லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு ‘கல்விக்கான ஆயுதமாக மடிக்கணினியை, தொடர்ந்து வழங்கி வந்தது எனது அரசு’ எனப் பச்சைப் பொய் சொல்கிறார் பழனிசாமி. அதிமுக ஆட்சியில் ரூ.68 கோடியில் வாங்கிய 55 ஆயிரம் லேப்டாப்கள் வீணடிக்கப்பட்டதை இந்திய தலைமைக் கணக்கு தணிக்கை அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த லேப்டாப் முறைகேட்டை அம்பலப்படுத்திய சிஏஜி அறிக்கை 2023 ஏப்ரலில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
2017-18ம் ஆண்டு போட்டித் தேர்வுக்கு தயாரான 12ம் மாணவர்களுக்கு லேப்டாப்புகள் வழங்க எல்காட் நிறுவனம் மூலம் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லேப்டாப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன. அதில், 8 ஆயிரத்து 79 லேப்டாப்புகள் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. 55 ஆயிரம் லேப்டாப்புகளை தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அந்த லேப்டாப்புகளின் பேட்டரிகள் வாரண்டி காலாவதி ஆகிவிட்டது. இதனால், ரூ.68 கோடியே 71 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது என சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
’அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட லேப்டாப் திட்டம் மாணவர்களுக்கு அறிவுப்பூர்வமான கல்வி கிடைப்பதை உறுதி செய்த திட்டம்’ எனச் சொல்கிறார் பழனிசாமி. வாங்கிய லேப்டாப்புகளையே விநியோகம் செய்யாமல் வீணடித்த பழனிசாமி அறிவுடன்தான் பேசுகிறாரா? 2017-18ம் ஆண்டில் 12ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2.32 லட்சம் மாணவர்கள், பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை லேப்டாப்புகளை பெறவில்லை. 55 ஆயிரம் மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்காமல் வீணடித்த எடப்பாடி பழனிசாமி, லேப்டாப் பற்றி எல்லாம் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா?
20 லட்சம் கல்லூரி மாணாக்கருக்கு லேப்டாப் வழங்கும் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தை முதல்வர் இன்று (நேற்று) தொடங்கி வைத்தார். தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த மடிக்கணினிகளில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD, Windows 11 Home Strategic BOSS Linux OS ஆகிய மென்பொருட்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில், நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro-வின் 6 மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் உலத்தோடு போட்டியிடும் வகையில் ஒவ்வொரு திட்டமாக வகுத்து வருகிறது திமுக அரசு. மகளிர், அரசு ஊழியர், மாணாக்கர் என ஒவ்வொரு பிரிவினரும் முதல்வரின் திட்டங்களால் பயன்பெறுவதைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் குமைகிறார் பழனிசாமி.
டீ கடையில் காசு இல்லாமல், ‘டேய் ஒரு டீ குடிக்க எவ்ளோ நடிக்க வேண்டியது இருக்கு உங்க முன்னாடி’ என வடிவேலு பேசும் காமெடி தான் பழனிசாமி பேசுவதைக் கேட்கும் போது நினைவுக்கு வருகிறது. டீ கடையில் இரண்டு பேப்பர் படிக்கும் போது அதில் உள்ள செய்திகளில் தனக்கு எல்லாம் தெரிந்தவர் போல வடிவேலு தலையிட்டு உதார் விடுவார். அப்படி தான் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் எல்லாம் தன்னால் தான் வந்தது என பழனிசாமி நடிக்க வேண்டியிருக்கிறது. ‘எல்லாமே என்னால் தான் நடந்தது’ என்று ஒரு போபியா சிலருக்கு உண்டு. அதில், பழனிசாமியும் சேர்ந்து கொண்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* இந்த அவமானம் உனக்கு தேவையா?
‘சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தான் புதுக்கோட்டையில் உரையாற்றி கொண்டிருந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, ‘ஏப்ரலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் வளர்ச்சி பாதையில் பங்கேற்போம்’ என்றார். ‘கூட்டணி ஆட்சி’ என ஆட்சியில் பங்கு என்றதோடு பழனிசாமியின் பெயரைக்கூட அமித்ஷா உச்சரிக்கவில்லை. ‘கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி தான்’ என அடிமைகள் வீராவேசம் காட்டினாலும் எஜமானர் அமித்ஷா, பழனிசாமி பெயரைக்கூட சொல்ல மறுக்கிறார்.. ‘கூட்டணிக்கு தலைமை’ என்ற பதவியிலேயே தடுமாறிக் கொண்டிருக்கும் பழனிசாமி தான் ‘முதல்வர் பதவிக்கு வரப் போகிறாரா? ‘இந்த அவமானம் உனக்கு தேவையா?’ என்ற நடிகர் வடிவேலுவின் காமெடிக்கு பொருத்தமான கேரக்டர் பழனிசாமி தான். அவமானங்களை தாங்கிக் கொள்வது ஆயக்கலைகளிலும் அடக்காத ஒன்று தான் போல’ என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.
