தெஹ்ரான்: அமெரிக்க டாலருக்கு நிகரான நாட்டின் நாணயத்தின் மதிப்பு புதிய வரலாறு காணாத அளவுக்குச் சரிந்ததைத் தொடர்ந்து, ஈரானிய வர்த்தகர்களும், கடைக்காரர்களும் இரண்டாவது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள சாதி தெருவிலும், 1979 இஸ்லாமியப் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்த தெஹ்ரானின் பிரதான கிராண்ட் பஜார் அருகே உள்ள ஷுஷ் பகுதியிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியாக சென்றனர். கடைகள் அடைக்கப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஈரானின் மத்திய வங்கியின் கவர்னர் முகமது ரெசா பர்சின் பதவி விலகினார்.
