மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, அதிபர் டிரம்ப் முயற்சிஎடுத்து வருகிறார். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் ரஷ்ய அதிபர் புடின் ராணுவ தளபதி வாலேரி கெராசிமோவ் மற்றும் படை பிரிவுகளின் தளபதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின் புடின் கூறுகையில், ‘‘அமைதியான வழிகளில் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் உக்ரைன் சிறிதும் அவசரப்படவில்லை.
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்தால் மாஸ்கோ ராணுவ பலத்தால் அதன் நோக்கங்களை தொடரும். உக்ரைன் அமைதிவழியில் போரை விரைவாக முடித்துக்கொள்ள விரும்புவதாகத் தோன்றவில்லை.இலக்குகளை அடைய மாஸ்கோ அதன் படைபலத்தைப் பயன்படுத்துவது உட்பட எதை வேண்டுமானாலும் செய்யும். உக்ரைன் அமைதியான முறையில் இதை தீர்க்கவில்லை என்றால், எங்களுக்கு முன் உள்ள அனைத்தையும் ராணுவ வழிமுறைகள் மூலம் நிறைவேற்றுவோம்’’ என்றார்.
ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக புளோரிடாவில் அதிபர் டிரம்பை சந்திக்க ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் புடினின் இந்த கருத்து வெளிவந்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று கூறியதாவது: உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தைகளில் மெதுவான முன்னேற்றத்திற்கு ஐரோப்பியர்கள் தான் காரணம்.
ஐரோப்பாவும், ஐரோப்பிய ஒன்றியமும் அமைதிக்கான முக்கிய தடைகளாக உருவெடுத்தன. அவை போர்க்களத்தில் ரஷ்யாவுடன் போரிட தயாராகி வருகின்றன. ரஷ்யா ஐரோப்பாவில் யாரையும் தாக்க விரும்பவில்லை. ஆனால் எந்த ஒரு தாக்குதலுக்கும் அதன் பதிலடி பேரழிவை ஏற்படுத்தும் என்றார்.
