அதிமுக பெண் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை

 

திருவெறும்பூர்: அதிமுக பெண் நிர்வாகி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். திருச்சி நவல்பட்டு பர்மா காலனி 7வது தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி ஜெயந்தி(36). இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். ஜெயந்தி அதிமுகவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளராக உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜெயந்தி கணவனை பிரிந்து மகள்களுடன் வாழ்ந்து வந்தார்.

நேற்று முன்தினம் ஜெயந்தி மகள்களுடன் இருந்தார். அப்போது இளைய மகள் கிருஷ்மிளா தலை முடிக்கு கலரிங் செய்து கொண்டு வந்தார். இதை பார்த்த ஜெயந்தி கண்டித்தார். இதில் கோபமடைந்த கிருஷ்மிளா வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்களை தள்ளி விட்டு உடைத்தாராம். இதில் மனம் உடைந்த ஜெயந்தி கதவை தாழிட்டுக்கொண்டு ஹாலில் உள்ள மின் விசிறியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கு மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை கீழே இறக்கி நவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ஜெயந்தி நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: