விழுப்புரம்: நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க ராமதாஸ் தரப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ராமதாஸ் உட்பட 22 பேர் கலந்து கொண்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பாமக செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீ காந்தி, அருள் எம்.எல்.ஏ.,பொதுச் செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் அலி, முன்னாள் எம்.பி. துரை, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாநில நிர்வாகி பரந்தாமன் உள்ளிட்ட 22 நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி தொடர்ந்து பாமகபெயரையும், டாக்டர் ராமதாஸ் பெயரை பயன்படுத்தி வருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், வருகிற தேர்தலில் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? அல்லது மாநில கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் புதிய கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? என டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து நடந்த பாமக நிர்வாகக் குழுவில், அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘பொய்யான ஆவணங்களை கொடுத்து தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியது குறித்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 46 ஆண்டுகளாக 96,000 கிராமங்களுக்கு நடந்து சென்று உருவாக்கிய இந்த கட்சியில் அன்புமணிக்கு உரிமை இல்லை.
அன்புமணிக்கு உரிமை இல்லாத கட்சியின் பெயரில் விருப்ப மனு வாங்குவதாக ராமதாஸ் தரப்பு பாமக தீர்மானம் அளித்துள்ளது. ஒட்டுக்கேட்பு கருவி வைத்து சொந்த அப்பனுக்கு ஆப்பு வைக்கத் துணிந்த அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தலையணை மந்திரத்தால் தலைக்கு பித்தம் ஏறி அலையோ அலையோ என அலைகிறார் அன்புமணி’ என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணியின் அத்தனை அவலத்துக்கும் அவருக்கு தலையணை மந்திரம் ஓதியவர்களே பொறுப்பு. கட்சியும் பாமகவின் சின்னமும் எங்களிடம்தான் உள்ளது. என பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
