சென்னை: பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எத்தனை முறை தமிழகம் வந்தாலும், வரும் தேர்தலில் அவர்களை தோற்கடிக்க தமிழக மக்கள் தயாராக உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 48-வது பிறந்த நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் முகாமை தொடங்கி வைத்து, ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேசுகையில், “நாட்டின் ஜனநாயகத்தை, சட்டத்தை காக்கும் போரில் திமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக வெற்றிக்கு கூட்டணி பலம் மட்டும் காரணமல்ல, தமிழக மக்களின் கருத்தியல் ரீதியான ஒற்றுமையும் காரணம். திமுக கூட்டணியை எதிர்க்க எத்தனை கட்சிகள் வந்தாலும்; பிரதமரும், உள்துறை அமைச்சரும் எத்தனை முறை தமிழகம் வந்தாலும், அவர்களை தோற்கடிக்க தமிழக மக்கள் தயாராக உள்ளனர்” என்றார்.
முன்னதாக பெரம்பலூரில் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தோல்வியை சந்தித்துள்ளது. இத்தோல்வியை நாங்கள் ஏற்கிறோம். இம்மாற்றம் ஜனநாயத்துக்கு தேவையான ஒன்றுதான். அதேசமயம் 42 ஆண்டுகள் திருவனந்தபுரத்தில் பொறுப்பில் இருந்த நாங்கள் தற்போது தோல்வியுற்றதை, பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் தமிழகத்துடன் ஒப்பிட்டுப் பேசுவது தவறு. தமிழக அரசியல் வேறு, கேரள அரசியல் வேறு. வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்
