- தமிழ்நாடு அரசு
- யூனியன் அரசு
- நவோதயா
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- குமாரி மகா சபா
- சென்னை உயர் நீதிமன்றம்
- ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நவோதயா பள்ளிகளை தமிழ்நாடு அரசு திறப்பதற்கு அனுமதி வழங்கி 2017 செப்டம்பர் 11ம் தேதி உத்தரவிட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2017 டிசம்பர் 11ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இதன் பிறகு நீண்ட வருடங்களாக இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. சமீபத்தில் இவ்வழக்கின் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போது டிசம்பர் 15ம் தேதி வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கின் விசாரணை இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி வில்சன், ‘‘மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் மாநில அரசுகளுக்கு கிடையாது என வாதம் முன் வைத்தார். ஆனால் ‘‘கல்வி ” என்பது ஒருங்கிணைந்த பொது பட்டியலில் இருப்பதால் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார். ஆனால் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் இத்தகைய திட்டங்கள் மூலம் மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தி திணைப்பை மேற்கொள்ள விரும்புகிறார்கள் என வாதம் முன் வைத்த போது, தயவு செய்து மொழி சார்ந்த பிரச்னைகளை நீதிமன்றத்தில் கொண்டு வராதீர்கள் என்றதோடு, தமிழ்நாட்டின் உள்ள மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்காதீர்கள் எனவும் நீதிபதி நாகரத்தினா கூறினார்.
அதற்கு, தமிழகத்தில் அவ்வாறு நடப்பதாக கூற வேண்டாம் என தமிழக அரசு தரப்பு வேண்டுகோள் வைத்ததோடு நாட்டிலேயே அதிக மாணவர்கள் பள்ளி சேர்க்கை தமிழகத்தில் தான் நடைபெறுகிறது என்றும், ஏற்கனவே தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒன்றிய அரசு இந்தி திணிப்பை செய்கிறார்கள் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றவுடன் எங்களுக்கு தர வேண்டிய நிதி தரப்படாமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இருப்பினும் நீதிபதிகள், தயவு செய்து இந்த விவகாரத்தை மொழி பிரச்னையாக மாற்ற வேண்டாம் என கேட்டுக் கொண்டதோடு தமிழ்நாடு என்பது நமது குடியரசின் அங்கம் இல்லையா? என கேள்வி எழுப்பினர். மேலும், ஒன்றிய அரசுடன் தமிழக அரசு அமர்ந்து பேசி நிலைமையை சரி செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினர். ஆனால் பல ஆண்டுகளாக ஒன்றிய அரசுடன் பேசி வரும் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தமிழக அரசு தரப்பு எதிர் வாதம் வைத்ததோடு நாங்கள் வேண்டாம் எனக் கூறும் திட்டத்தை நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்து புறவழி வாசல் வழியாக எங்கள் மீது திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினர்.
இதைத் தொடர்ந்து ஒன்றிய அரசுடன் பேசுவதற்கான தேதியை நீதிமன்றமே தீர்மானிக்கும் என்ற நீதிபதிகள், எங்கள் மாநிலம் எங்கள் அரசு என தயவு செய்து யாரும் சொல்லாதீர்கள்! இது கூட்டாச்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்பட கூடிய நாடு என தெரிவித்தனர். அதற்கு தமிழக அரசு தரப்பு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசே செயல்படுகிறது என்றும் எதற்கெடுத்தாலும் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என மத்திய அரசை குற்றம் சாட்டினர். அதற்கு நீதிபதிகள் மத்திய அரசு செய்வதை திணிப்பு என்று எடுத்துக் கொள்ளாதீர்கள்! அதை தமிழக மாணவர்களின் வாய்ப்பாக எடுத்துக் கொள்ளுங்கள் என கருத்து தெரிவித்ததோடு, எதிர்மறையான மனப்பான்மையுடன் இது போன்ற விவகாரங்களை கையாளாதீர்கள் எனவும் கூறினர்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் இருமொழி கொள்கைகள் அமல்படுத்தப்படும் நிலையில் அத்தகைய நிலைப்பாட்டுக்கு எதிராக நவோதயா பள்ளிகள் இருக்கும் என தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்தது. ஆனால் நீதிபதிகளோ, இந்த வாதங்களை ஏற்க மறுத்ததோடு அடுத்த 6 வார காலத்திற்குள் பள்ளிகள் அமைப்பதற்கான இடங்களை கண்டறியுமாறு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இப்போதே பள்ளிகளை கட்ட வேண்டும் என உத்தரவிடவில்லை மாறாக பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை மட்டும் தான் கண்டறிய உத்தரவிடுகிறோம் எனவும் தெளிவுபடுத்தி, 2017ம் ஆண்டு இவ்வழக்கில் விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டு வழக்கை ஆறு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
