சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் நாகப்பட்டினம் 30, மயிலாடுதுறை 1, ராமேஸ்வரம் 1, கோட்டைப்பட்டினம் 1 ஆகிய 33 மீனவர்கள் 4 விசைப்படகுகளில் கடந்த நவம்பர் மாதம் 2ம் தேதி, கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 3ம் தேதி நள்ளிரவில் கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, இலங்கை கடலோர காவல் ரோந்து படை கப்பல் ஒன்று வந்து, தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை சுற்றி வளைத்து, எல்லை தாண்டி வந்ததாக 33 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மீனவர்களின் குடும்பத்தினர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு அவசர கடிதங்கள் எழுதினார். இதை தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம், தமிழக மீனவர்கள் 33 பேரையும் சிறையிலிருந்து விடுவித்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.
இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களை முகாம்களில் தங்க வைத்ததோடு, அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்தனர். மீனவர்கள் அனைவருக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கியதோடு, மீனவர்களை விமானத்தில் அனுப்பி வைப்பதற்கான விமான டிக்கெட் ஏற்பாடுகளையும் செய்தனர். இந்நிலையில் நேற்று காலை இலங்கையில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் 33 தமிழக மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அதோடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம், மீனவர்கள் 33 பேரையும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
