×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” என்னும் நூலை வெளியிட்டார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” எனும் நூலை இன்று தலைமைச் செயலகத்தில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் வெளியிட, அதை முதலமைச்சர் பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 மே அன்று ஆட்சிப்பொறுப்பேற்ற போது, “இது ஒரு கட்சி அரசு அல்ல; ஓர் இனத்தின் அரசு” என்று குறிப்பிட்டார்கள். அதன்படியே, தமிழ் இனத்தின் பெருமைகள் கூறும் மிகச் சிறந்த அரசாக ஐந்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்துள்ளது இந்த அரசு”

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் மொழியின் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மைகள் எல்லாம் மிளிரும் வகையில் உரிய ஆதாரங்களுடன் தமிழ் மக்களும் மற்றவர்களும் அறிந்து உணர்ந்து மகிழ்ந்து பெருமிதம் கொள்ளும் வகையில் இனிய தமிழில் எளிய நடையில் எழுதியுள்ளார்

இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் கீழடி, பொருநை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொன்மைச் சிறப்புகள் வாய்ந்த பொருள்களை நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியுள்ள அருங்காட்சியகங்களைக் காண்பது போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும். இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் தாதுப் பொருள்களில் இருந்து இரும்பைப் பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் இருந்தே 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியுள்ளது என்பது கீழடி, பொருநை அகழாய்வுகள் மூலம் உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இவற்றைத் தொடர்ந்து மேலும் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவரும் அகழாய்வுகளின் துணைகொண்டு தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம், ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், இராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம், சென்னை, எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒரு புதிய வெண்கல அருங்காட்சியகம் எனப் பல அருங்காட்சியகங்கள் 285 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவிருக்கின்றன.

இத்தகைய சிறப்புகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் குமரி முனையில் உள்ள அய்யன் திருவள்ளுவர் பேரறிவுச் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் வகையில் 37 கோடி ரூபாய் செலவில் கடல் மீது கண்ணாடி இழைப்பாலம் ஒன்றைக் கட்டித் திறந்து வைத்துள்ளார்.

தமிழ்ப்பண்பாட்டின் வேர்களைத் தேடும் பணிகளில் ஒன்றாக ஆண்டுதோறும் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் அயலகத் தமிழர்கள் தினம் கொண்டாடி வெளிநாட்டுத் தமிழர்களிடம் தாய்த் தமிழ்நாட்டு உணர்வை வளர்க்கிறார்கள். தமிழ்ப் பெருமை கூறும் நூல்கள் பல அயல்நாட்டு மொழிகளில் வெளியிடப்படுகின்றன. இவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன. சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என முதன்முதலில் ஆய்ந்து அறிவித்து உலகின் கவனத்தை ஈர்த்த ஜான் மார்ஷல் அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு, அவரது திருவுருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.

முதலமைச்சர் தமிழ் மொழியின் பெருமைகளை உலகுக்குப் பறைசாற்றும் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் “இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி, தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்படவேண்டும்” என்று பேரவையிலும், வேறு பல்வேறு நிகழ்வுகளிலும் எடுத்துரைத்து, ஒன்றிய அரசையும் வலியுறுத்தி வருகிறார்கள்.

அருமைத் தமிழ் மொழியின் செழுமைகளையும் சிறப்புகளையும் அவ்வப்போது வலியுறுத்தி, பல்வேறு நிகழ்வுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றியுள்ள பேருரைகள் தொகுக்கப்பட்டு, “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” எனும் பெயரில் அழகிய வடிவில் பல்வேறு வண்ணங்களில் நூலாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூலில் தொல்லியல் பொருட்களைக் காட்சிப்படுத்தியுள்ள அருங்காட்சியகங்கள், புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், குமரிமுனையில் பேரறிவுச் சிலையுடன் கண்ணாடி இழைப்பாலம், வெளியிடப்பட்டுள்ள தமிழ்நூல்கள் முதலான பல்வேறு செய்திகளுடன் வண்ணப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்நூலில், தமிழுக்கான அரசாணைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படுவதை நெறிப்படுத்தும் போன்ற முக்கியமான அரசாணைகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசால் செய்யப்பட்ட சிறப்புகள், வழங்கப்பட்ட விருதுகள் மற்றும் சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கியது குறித்தும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். இவற்றைக் காண்பவர்கள் உள்ளத்தில் இந்நூலைப் படிக்க வேண்டும். தமிழ்ப் பண்பாட்டுக் களங்களை நேரில் சென்று காணவேண்டும் என்னும் உணர்வுகளை ஏற்படுத்தும்.

உலகின் தொன்மையான – தன்னிகரற்ற – தனித்தன்மையான நம் தாய்த்தமிழ் மொழியின் பெருமைகள் அனைத்தையும் உணர்த்தும் வண்ணம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” என்னும் சிறப்பு வாய்ந்த நூல் இன்றைய தினம் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வின்போது, சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், இ.ஆ.ப., சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கி. சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்” இவ்வாறு கூறினார்.

Tags : Chief Minister ,Mu. K. ,Minister ,Thangam Thannarasu ,Stalin ,Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,K. Stalin ,Minister of ,Environment ,of ,Chief Minister of Tamil Nadu ,
× RELATED சென்னையில் புறநகர் ரயில் சேவை...