சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்களின் பாதை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே சேவை முடங்கியதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக வழக்கமாக 10, 11ம் நடைமேடைகளில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் 5, 6ம் நடைமேடைகளில் இருந்து நள்ளிரவு முதல் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்களின் பாதை தற்காலிகமாக மாற்றம் செய்து 45 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரை – தாம்பரம் செங்கல்பட்டு வழித்தடத்தில் வழக்கமாக 208 மின்சார ரயில்கள் இயக்கப்படும் நிலையில், 164 ரயில்களாக குறைக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவை மாற்றம் இன்று அமலுக்கு வந்த நிலையில், சிக்னல் கோளாறு ஏற்பட்டு முதல் நாளிலேயே ரயில் சேவை முடங்கியது. சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து நின்ற மின்சார ரயில்களால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். காலையில் பணிக்கு செல்வோர், வெளியூர் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ரயில்களில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் சாரைசாரையாக பயணிகள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. ரயில் நிலையங்களிலும் நீண்ட நேரமாக காத்திருக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
