×

சட்டமன்ற வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

 

சென்னை: சட்டமன்ற வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்தார். திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். ஆனால், அ.தி.மு.க.வை அவரால் இதுவரை மீட்க முடியவில்லை. அது முடியாது என்று தெரிந்த நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறி மாற்றுக் கட்சியில் இணைந்து வந்தனர்

கிட்டத்தட்ட தனித்து விடப்பட்ட நிலையில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், சட்டசபை தேர்தலில் என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எழுந்தது.
“தைப்பிறந்தால் வழி பிறக்கும்’ என்று அவர் கூறிவந்த நிலையில், தை மாதத்தில் எந்த அரசியல் முன்னெடுப்பையும் அவர் மேற்கொள்ளவில்லை. என்றாலும், நிர்வாகிகளை சந்தித்து பேசிய அவர், “அ.தி.மு.க.வில் மீண்டும் இணைய நான் ரெடி, சேர்த்துக்கொள்ள அவர்கள் ரெடியா?” என்று கேள்வி எழுப்பினார்

ஆனால், ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்த அன்றைய தினமே. “அது நடக்கவே நடக்காது” என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். இதனால், ஓ.பன்னீர்செல்வம் மவுனம் காத்து வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்கள் அவரிடம், “தை மாதமும் முடிந்துவிட்டது. உங்கள் முடிவதான் என்ன?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம். “பொறுமையாக இருங்கள்” என்று மட்டும் கூறிச் சென்றார்

இந்த நிலையில், இன்று யாரும் எதிர்பாராத வகையில், சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது அறைக்கு சென்று பூங்கொத்து கொடுத்து சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, அரசியல் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலில் அவர் தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துவிட்டாரா? என்ற கேள்வியும் எழுகிறது.

ஏனென்றால், ஓ.பன்னீர்செல்வம் அரசியல் கட்சி எதுவும் தொடங்கவில்லை. இயக்கம் மட்டுமே நடத்தி வருகிறார். எனவே, திமுகவிலேயே ஐக்கியமாக திட்டமிட்டுள்ளாரா? என்ற யூகங்களையும் மறுக்க முடியவில்லை. ஏற்கனவே, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக இருந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் இணைந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Stalin ,Paneer Selvam ,Chennai ,K. ,O. ,PANNIERSELVAM ,DIMUKA ,2021 Assembly Elections ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள...