ஈரோடு, பிப். 18: ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு வரும் 23ம் தேதி தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு கடந்த 10ம் தேதி முதல் தொடங்கி, 16ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு வரும் 23ம் தேதி செய்முறை தேர்வு தொடங்கி, 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில், ஈரோடு மாவட்டத்தில் 210 அரசு மற்றும் அரசு நிதி பெறும் பள்ளிகள், 109 தனியார் பள்ளிகளில் படிக்கும் 24,470 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான்விழி வழிகாட்டுதலின்படி, கல்வி துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர். இதையடுத்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் 11ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 6ம் தேதி நிறைவடைய உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
